Header Ads



ஆப்கானிஸ்தானிலிருந்து பிரான்ஸ் படைகள் முற்றாக வெளியேற்றம்



ஆப்கானிஸ்தானில் தலிபான்களின் ஆட்சியை அகற்றி, அமெரிக்கா தலைமையிலான “நேட்டோ” படைகள் கடந்த 2002-ம் ஆண்டு அங்கு முகாமிட்டன. கடந்த 10 ஆண்டுகளாக அங்கு தங்கியிருந்து தலிபான் மற்றும் அல்கொய்தாகளுடன் போரிட்டு வருகின்றனர்.

தலிபான்களின் ஆட்சி அகற்றப்பட்ட நிலையில் தற்போது அங்கு கர்சாய் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அதை தொடர்ந்து நேட்டோ படைகள் வெளியேற வேண்டும் என்ற எதிர்ப்பு ஆப்கானிஸ்தானில் ஒலிக்க தொடங்கி விட்டது. எனவே, அமெரிக்க படைகள் 2014-ம் ஆண்டு முற்றிலும் வாபஸ் பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே நேட்டோ படையில் அங்கம் வகிக்கும் சில நாடுகள் தங்கள் ராணுவ வீரர்களை வாபஸ் பெற்று விட்டது. இந்த நிலையில், நேட்டோவில் உள்ள தங்களது ராணுவ வீரர்களை ஜூலை 31-ந்தேதிக்குள் வாபஸ் பெறுவதாக பிரான்ஸ் அதிபர் ஹோலண்டே அறிவித்து இருந்தார்.

அதன்படி நேற்று பிரான்ஸ் ராணுவமும் வாபஸ் பெறப்பட்டது. இப்படைகள் ஆப்கானிஸ்தானில் காபூல் அருகேயுள்ள சுரோபி மாவட்டத்தில் முகாமிட்டிருந்தது. அங்கிருந்து முற்றிலும் வெளியேறியது. அதற்கான விழா நேற்று நடந்தது. அப்போது சுரோபி பகுதியின் பாதுகாப்பு பணியை ஆப்கானிஸ்தான் ராணுவத்திடம் பிரான்ஸ் முறைப்படி ஒப்படைத்தது.

No comments

Powered by Blogger.