சலே வழக்கு, திலீப் பீரிஸ் முன்வைத்த பரபரப்பான தகவல்கள்
(அததெரண)
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளது குறித்த முன் அறிவித்தல் இருந்தபோதிலும், இராணுவப் புலனாய்வுப் பிரிவு அனைத்து தகவல்களையும் சதித்திட்டத்தின் அடிப்படையில் மறைத்து, தாக்குதல் நடப்பதற்கு இடமளித்து அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்ததாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் இன்று (15) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கிடையில், அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே தொடர்பான மருத்துவ அறிக்கைகளை இதுவரை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்காததற்கான காரணங்களை விளக்கி, வரும் செப்டம்பர் 22 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகி அந்த அறிக்கைகளைச் சமர்ப்பிக்குமாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு நீதவான் பசன் அமரசேன அழைப்பாணை பிறப்பித்தார்.
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இக்கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.
நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட முக்கிய தகவல்கள்:
சலேவின் மருத்துவ விடுப்பு: 3 ஆம் சந்தேக நபரான சுரேஷ் சலே ஜூன் 07 முதல் 100 நாட்களாக மருத்துவ விடுப்பில் இருப்பதாகவும், விசாரணைகளை முடக்குவதற்கும் தனது எஜமானர்களைப் பாதுகாப்பதற்குமே அவர் இவ்வாறு செயற்படுவதாகவும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் குற்றம் சாட்டினார்.
மேலும், சலே தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவை ஒரு 'ஓய்வு விடுதியாக' பயன்படுத்தி வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அவரது சுகாதார நிலை குறித்து விரிவான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடுமாறு கோரினார்.
சஹ்ரானைப் பாதுகாக்கும் சதி: சஹ்ரானைப் பாதுகாத்து, தாக்குதலின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகளை மறைக்க இராணுவப் புலனாய்வுப் பிரிவின் ஒரு குழு செயற்பட்டுள்ளதாகவும், அதனாலேயே வவுணதீவு பொலிஸார் கொலை தொடர்பான விசாரணை திசைதிருப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
முன்னறிவிப்பும் உளவுத்துறைத் தகவலும்: வவுனியாவிலுள்ள இராணுவ புலனாய்வுப் பிரிவின் முதலாம் படைப்பிரிவுக்குத் தகவல் வழங்கிய நபரிடமிருந்து பெறப்பட்ட வாக்குமூலத்தின்படி, 2014 முதல் தாக்குதலுக்குச் சில நாட்களுக்கு முன்பு வரை தீவிரவாதிகள் பற்றிய துல்லியமான தகவல்கள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருந்தும், புலனாய்வுப் பிரிவு அதனை ஏனைய பாதுகாப்புத் தரப்பிற்கு தெரிவிக்காமல் மறைத்துள்ளது.
அரசியல் பின்னணி மற்றும் உதவி: தாக்குதலுக்கு உடந்தையாக இருந்தவர்களுக்கு ரிஷாத் பதியுதீன் அரசியல் பாதுகாப்பு அளித்துள்ளதுடன், மன்னார் தொழிலதிபர் அலாவுதீன் என்பவர் தனது ஸ்பீட் போட் மூலம் சஹ்ரான் உள்ளிட்டோரை இந்தியாவுக்கு அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சாய்ந்தமருது சம்பவம்: சாய்ந்தமருது பகுதியில் 16 பேர் உயிரிழந்த சம்பவத்தில், உண்மைத் தகவல்கள் வெளிவருவதைத் தடுப்பதற்காக இராணுவத்தின் ஒரு குழு திட்டமிட்டு அவர்களைப் படுகொலை செய்ததா என்பது குறித்தும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
சந்தேக நபர் தரப்பு விளக்கம்: சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவிந்திர பெர்னாண்டோ, 'பி' அறிக்கைகளில் உள்ள குற்றச்சாட்டுகள் சாட்சியங்கள் அல்ல எனக் குறிப்பிட்டதுடன், நீதிமன்ற நடைமுறைகளின்படி மருத்துவ அறிக்கைகளை மாத்திரம் கோருமாறு கேட்டுக்கொண்டார்.
இதனையடுத்து, தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு அழைப்பாணை அனுப்ப உத்தரவிட்ட நீதவான், வழக்கினை செப்டம்பர் 22 ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.

Post a Comment