சுப்பிரமணியை காட்டிற்குள் அழைத்துச்செல்ல அனுமதி இல்லை
காடுகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால், பாதயாத்திரையில் பங்கேற்கும் ‘சுப்பிரமணி’ எனும் செல்லப்பிராணிக்கும், அதனுடன் வரும் அடியார்களுக்கும் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, காட்டுப்பகுதிக்குள் சுப்பிரமணியை அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என வனஜீவராசிகள் திணைக்களத்தின் சட்ட ஆலோசகரும், சுற்றாடலியலாளருமான கந்தையா பிரியதர்சனி தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “குறித்த செல்லப்பிராணி பாதயாத்திரை செல்வது பிரச்சினையல்ல; ஆனால் காட்டிற்குள் பயணிக்கும் சக மனிதர்களின் பாதுகாப்பினையும், பாதயாத்திரை மேற்கொள்ளும் அந்தச் செல்லப்பிராணியின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டே, சுப்பிரமணியை காட்டிற்குள் அழைத்துச் செல்ல வனஜீவராசிகள் திணைக்களம் அனுமதி வழங்காது” என்று தெரிவித்தார்.
அத்துடன், உகந்தை காட்டுப்பாதை ஆரம்பிக்கும் பாணமை பகுதியில், கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிறுத்தை தாக்கி விவசாயிகள் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், இரண்டு செல்லப்பிராணிகள் சிறுத்தை தாக்குதலுக்குள்ளாகி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாகவும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

Post a Comment