பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை கைது செய்ய கோட்டை நீதவான் உத்தரவு!
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபகச, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் முன்னாள் தலைவர் பாஷ்வர குணரத்ன மற்றும் அதன் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ரூமி ஜவ்பர் உள்ளிட்டோரை உடனடியாகக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (29) குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2014 ஆம் ஆண்டு ஊவா மாகாண சபை தேர்தல் பிரசாரத்திற்காக, சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்திற்குச் சொந்தமான 7.8 மில்லியன் ரூபாய் பொது நிதியை முறைகேடாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டிலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், பொதுச்சொத்து சட்டத்தின் கீழ் பசில் ராஜபக்ச உள்ளிட்டோரை இந்த வழக்கில் சந்தேகநபர்களாகப் பெயரிடுவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் மனுவொன்றின் ஊடாக அறிவித்தது.
இதனைத் தொடர்ந்தே, சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான உத்தரவை நீதவான் பிறப்பித்தார். எனினும், இவர்களைக் கைது செய்வதற்காக குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் இவர்களது வீடுகளுக்குச் சென்றபோது, சந்தேகநபர்கள் எவரும் அங்கு இல்லை என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

Post a Comment