தேசிய ஒலிம்பிக் குழுவின் தேர்தலில் ஜஸ்வர் உமர்
தேசிய ஒலிம்பிக் குழுவின் எதிர்வரும் அதிகாரபூர்வத் தேர்தலில், பல்வேறு விளையாட்டுச் சங்கங்களின் ஏகோபித்த ஆதரவுடன் தான் 'பொது வேட்பாளராக'த் தலைவர் பதவிக்குப் போட்டியிடவுள்ளதாக இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் ஜஸ்வர் உமர் அறிவித்துள்ளார்.
நாட்டின் விளையாட்டுத் துறையை மறுசீரமைக்கும் நோக்கில், பல முன்னணி விளையாட்டுச் சங்கங்களுடன் முன்னெடுக்கப்பட்ட நீண்ட கலந்துரையாடல்களுக்குப் பின்னரே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தான் வெற்றி பெற்ற 24 மணி நேரத்திற்குள் அனைத்துத் தரப்பினரையும் ஒரே மேசைக்கு அழைத்து, விளையாட்டுத் துறையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்துக் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜஸ்வர் உமர் உறுதியளித்தார்.
இலங்கை உதைப்பந்து சம்மேளனம் சர்வதேசத் தடையை எதிர்கொண்டிருந்த போது, அந்தத் தடையை நீக்கி, போட்டிகளை மீள ஆரம்பித்து, தரவரிசையில் முன்னேற்றத்தை ஏற்படுத்திய தனது அனுபவத்தை ஜஸ்வர் உமர் நினைவு கூர்ந்தார்.
அதேபோன்றதொரு எழுச்சியை ஒட்டுமொத்த இலங்கை விளையாட்டுத் துறையிலும் ஏற்படுத்த விளையாட்டுத்துறை அமைச்சருடன் இணைந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றப் போவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Post a Comment