Header Ads



சட்டம் ஒழுங்கு குண்டர்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது - சஜித்


இன்று, நாட்டு மக்கள் எதிர்பார்த்த புதிய இலங்கை கட்டியெழுப்பப்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. உள்ளூராட்சி மன்றங்கள், தெளிவான பாராளுமன்ற பெரும்பான்மை மற்றும் ஜனாதிபதி பதவியின் அதிகாரத்தைக் கொண்ட தற்போதைய அரசாங்கம், தான் அளித்த வாக்குறுதிகள், தருவதாகச் சொன்ன சலுகைகள், உறுதியளித்த சேவைகளை நிறைவேற்றியபாடில்லை. அபிவிருத்தியால் மிளிரச் செய்வோம் என்று அளித்த வாக்குறுதிகள் இன்று நிறைவேற்றப்படவில்லை. இன்று நாட்டில் அபிவிருத்தி ஏற்படுவதற்குப் பதிலாக, இன்று நாட்டில் பாதாள உலகக் கலாச்சாரமே உருவாகி வருகிறது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.


ஐக்கிய மக்கள் சக்திக்கு புதிய அங்கத்தவர்களை இணைத்துக் கொள்ளும் முகமாக மத்திய கொழும்பு தேர்தல் தொகுதியின் கிழக்கு மாளிகாவத்தை மற்றும் கெத்தாராம வட்டாரங்களை சேர்ந்த மக்களின் பங்கேற்புடனான மக்கள் சந்திப்பொன்று நேற்று (31) மாலை இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இந்த மக்கள் சந்திப்பை ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற கொழும்பு மாவட்ட உறுப்பினர் முஜிபுர் ரஹுமான் அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். இப்பிரதேசங்களைச் சேர்ந்த ஏராளமான மக்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.


மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறும்போது, ​​அவர்கள் வீடு திரும்புவார்களா இல்லையா என்பதில்  அவர்களுக்கு நம்பிக்கையில்லா நிலை காணப்படுகின்றன. துப்பாக்கிச் சூடு நடத்தப்படுமா அல்லது கொலை நடக்குமா என்பது குறித்து நிச்சயமற்ற தன்மை நிலவுகிறது. இந்நாட்டு மக்கள் இன்று சமூகப் பாதுகாப்பைக் கூட இழந்துவிட்டனர். தேசிய பாதுகாப்பு இருப்பதாக தெரியவில்லை. இந்த அரசாங்கத்தின் திறமையின்மையால், சட்டம் ஒழுங்கு குண்டர்கள் மற்றும் பாதாள உலகக் கும்பல்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் முழு நாட்டிலும்  அச்சமும் சந்தேகமும் நிலவுகின்றன என்று  எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.