Header Ads



AI மூலம் மாணவிகளை அசிங்கப்படுத்தும் மாணவர்கள்

 


AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 16 வயதுடைய 4 மாணவிகளின் முகங்களை முறையற்ற புகைப்படங்களாக இணைத்து வட்ஸ்அப் குழுக்களில் பரப்பிய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட 2 சந்தேக நபர்களையும் ஹொரணை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிபதி சந்தன கலன்சூரிய உத்தரவிட்டார்.


முறைப்பாட்டாளர்களான மாணவிகள் கற்கும் அதே பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் மற்றும் ஹொரணை பகுதியில் உள்ள மற்றுமொரு பாடசாலையின் மாணவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


ஹொரணையில் உள்ள பிரபலமான பாடசாலையின் மாணவி ஒருவர், தனது பெற்றோருடன் மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளனர்.


தங்கள் மகளின் முகத்தின் புகைப்படத்தைப் பயன்படுத்தி AI தொழில்நுட்பத்தின் ஊடாக உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் வட்ஸ்அப் குழுவில் பரப்பப்படுவதாகவும், தனது மகள் கடுமையான மன அழுத்தத்தில் இருப்பதாகவும், வகுப்புகளுக்கு செல்ல தயங்குவதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.


முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட ஒரு நாளுக்குள் அதே பாடசாலையை சேர்ந்த 3 மாணவர்களிடமிருந்து மேலும் 3 முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்ததையடுத்து பொலிஸ் அதிகாரிகள் இந்த விடயத்தில் சிறப்பு கவனம் செலுத்தியுள்ளனர்.


மாணவர்களின் முகங்களின் தகாத புகைப்படங்களை உருவாக்க AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

No comments

Powered by Blogger.