காத்தான்குடியில் அழகிய முன்மாதிரி - வரலாற்றில் முதல் தடவை (படங்கள்)
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
வரலாற்றில் முதல் தடவையாக மாணவர்களினால் சேகரிக்கப்பட்ட பணம், பணி ஒன்றுக்கு ஒப்படைக்கப்பட்ட முன்மாதிரியான நிகழ்வொன்று இன்று -25- மட்டக்களப்பு காத்தான்குடி பாடசாலையொன்றில் இடம்பெற்றுள்ளது.
காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற சுமார் 250 மாணவர்கள் கடந்த வருடம் உலக சிறுவர் தினத்தையொட்டி 250 உண்டியல்களில் சிறுக சிறுக பணம் சேகரிக்க ஆரம்பித்தனர்.
இவ்வாண்டு உலக சிறுவர் தினத்தில் குறித்த உண்டியலை பாடசாலை அதிபரிடம் குறித்த மாணவர்கள் ஒப்படைத்துள்ளனர். இவ்வாறு சேகரிக்கப்பட்ட 250 உண்டியல்களிலும் சுமார் மூன்று லட்சம் ரூபாய் வரை பணம் சேர்ந்துள்ளதாகவும் குறித்த பணத்தை கிழக்கு மாகாண புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் இன்று காலை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
கடந்த ஒரு வருட காலமாக மாணவர்கள் சேகரித்த பணமே இவ்வாறு பொதுப்பணிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஹிழுறியா அதிபர் எஸ் ஐ யசீர் அரபாத் தலைமையில் ஏறாவூரில் இயங்குகின்ற கிழக்கு மாகாண புற்றுநோயாளர் பராமரிப்பு நிலைய நிருவாகத்தினரிடம் இத்தொகை பணம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சேமிப்பு பழக்கத்தை மாணவர்கள் மத்தியில் ஊக்குவிப்பதற்காகவும் பொதுப்பணியில் மாணவர்களின் ஆர்வத்தை அதிகரிப்பதற்காகவும் மேற்படி சேமிப்பு திட்டத்தை எமது பாடசாலை ஆரம்பித்துள்ளதாக காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்தினுடைய அதிபர் எஸ்ஐ யாசீர் அரபாத் தெரிவித்தார்.
காத்தான்குடி ஹிழுறியா வித்தியாலயத்திலிருந்து இன்று காலை பஸ் வண்டிகள் மூலம் 250 மாணவர்களும் ஏறாவூரில் இயங்கும் கிழக்கு மாகாண புற்றுநோயாளர் பராமரிப்பு நிலையத்தில் குறித்த ஊண்டியல்களை கையளிதர்தனர்.









Post a Comment