Header Ads



சஹ்ரான் குறித்து ரணிலின் மனைவி, ஹக்கீமீடம் எழுப்பிய கேள்வி


சஹ்ரான் தொடர்பில் அன்றைய பிரதமராக இருந்த இன்றைய ஜனாதிபதியின் மனைவியார் என்னிடம் கேள்வி எழுப்பினார். அத்துடன் இது குறித்து  ஷானி அபேசேகரவிற்கு நான் அறிவித்தபோது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை எனக்குச் சொன்னார் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்,


சஹ்ரான் என்ற நபர் ஊருக்குள்ளே சாதாரணமாக வன்முறைகளில் ஈடுபட்டவர் என்பதைத் தாண்டி, இவ்வளவு சீக்கிரமாக உலகத்தில் அனைவராலும் பேசப்பட்ட, மிக நுட்பமான வெடிகுண்டு முறைகளைப் பயன்படுத்தி மிகப்பெரிய தாக்குதலை நடத்தும் அளவுக்கு வந்துள்ளமை என்பது தன்னிச்சையாக முடியாத காரியம்.


இப்படி ஒரு படுபாதக செயலை செய்வதற்கு நிச்சயமாக அவரின் பின்னால் உள்ள ஒரு சக்தி இயக்காமல் அவரால் இது முடிந்திருக்கவே முடியாது.


தீவிரவாதம் என்ற விடயம் உருவாவதற்கு முன்பிருந்தே இது தொடர்பான சமிக்ஞைகள் வந்தபோது, ஆண்மீக தலைமைகள் இது தொடர்பான நடவடிக்கை எடுத்து அவரை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர்.


சஹ்ரான் தொடர்பில், அன்றைய பிரதமராக இருந்த இன்றைய ஜனாதிபதியின் மனைவியார் இது சம்பந்தமாக இணையத்தில் வந்த ஒரு பேட்டியை பார்த்துவிட்டு, இப்படி மிகத் தீவிரமாக ஒருவர் கதைக்கின்றார். இது பற்றி உங்களுக்கு தெரியுமா என்று கேட்ட பிற்பாடுதான் இப்படி ஒரு நபர் இருப்பது எனக்கு தெரியும்.


உடனடியாக விசாரணை செய்து பார்த்த போது இப்படி ஒரு நபர் இருந்தார். ஆனால் தலைமறைவாகிவிட்டார். அவர் நாட்டிலும் இல்லை என்ற மாதிரிதான் பேசப்பட்டது.


உடனடியாக இது சம்பந்தமாக நான் அன்றிருந்த குற்றப்புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாக இருந்த ஷானி அபேசேகரவுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது அவர் பல திடுக்கிடும் உண்மைகளை எனக்குச் சொன்னார்.


ஆனால் அவர் மிக நம்பிக்கையுடன் எனக்குச் சொன்னார், இவர்கள் மிக மோசமான வழித்தடத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பது எனக்குத் தெரியும். 50 பேர் கொண்ட குழுவை இவர்களை தேடி கண்டுபிடிப்பதற்காக நான் நிறுத்தியிருக்கின்றேன். எப்படியாவது இவரை கண்டுபிடித்து கைது செய்துவிடுவோம் என்று ஒரு நம்பிக்கையோடு பேசினார்.


மேலும், அவர்களுடைய தொலைபேசி அழைப்புக்களை கண்காணிப்பதற்கான வேலைகளும் நாங்கள் மேற்கொள்கின்றோம். எப்படியாவது அவர்களை கைது செய்து விடுவோம் என்று ஷானி அபேசேகர மேலும் பல விடயங்களை எனக்குச் சொன்னார். ஆனால் நிலைமை கைமீறி போய்விட்டது  என குறிப்பிட்டார்.

No comments

Powered by Blogger.