காத்தான்குடியில் பட்டப் பகலில் வீட்டை உடைத்து 28 லட்சம் பெறுமதியான நகைகள் திருட்டு
- ரீ.எல்.ஜவ்பர்கான் -
பட்டப் பகலில் வீட்டை உடைத்து 28 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத் தாலியை திருடிய 26 வயது நபரை காத்தான்குடி பொலிஸார் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஏ.எம்.எஸ். ஏ. ரஹீம் தெரிவித்தார்
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆரையம்பதி ஊர்வீதியில் உள்ள ஓய்வு பெற்ற கல்விப் பணிப்பாளர் ஒருவரின் வீட்டை வீட்டில் யாரும் இல்லாத நேரம் முன் கதவு பக்கமாக உடைத்து உள்ளே நுழைந்து அலுமாரியை உடைத்து அங்கிருந்த 28 லட்சம் ரூபாய் பெறுமதியான தங்க தாலியை திருடிய நபரை காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ரஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் நேற்றிரவு (25) கைது செய்தனர்.
கடந்த 12 ஆம் திகதி காலை தனது வீட்டை பூட்டிவிட்டு மட்டக்களப்பில் உள்ள தனது மகளின் வீட்டுக்குச் சென்று மீண்டும் அன்றைய தினம் பகல் 2 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது முன் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடன் அனுமாரியை உடைத்து தாலிக்கொடியை திருடி இருப்பது தெரியவந்துள்ளது.
காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டை அடுத்து குற்ற தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி றஹீம் தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையின் மூலம் காத்தான்குடி டீன் வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய நபர்கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட உள்ளதாக குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Post a Comment