Header Ads



ரணிலைப் போன்று சந்திரிகாவையும் ஜனாதிபதியாக்குமாறு கோரிக்கை


“படு பாதாளத்திற்குச் செல்லும் இந்த நாட்டை மீட்கக்கூடிய ஒரே ஒரு நபர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தான்” என்று நவ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.


ஹட்டன் நவ ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில், நாட்டில் பொருளாதார சிக்கல்கள் மட்டுமல்லாமல் ஜனநாயகத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.


அத்துடன், நாட்டின் ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற பின்னர், ராஜபக்ச குடும்பத்தினால் பாதிக்கப்பட்ட நாட்டுப் பொருளாதாரத்தினை மீட்டெடுத்து நாட்டை காப்பாற்றுவார் என்று மக்கள் மத்தியில் ஒரு கனவு இருந்தது.


ஆனால், ஆரம்பத்திலே அவர் நாட்டின் உண்மையான, நேர்மையான ஜனாதிபதியாகத் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு பொறுப்பேற்று வாக்குறுதிகளை வழங்கி வீர வசனம் பேசி வந்தார். தற்போது நாட்டில் சிறந்த குள்ள நரியாகத் திகழ்கிறார் என்பது உண்மையில் வேதனை அளிக்கக் கூடியது.


ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகுவதற்கான ஒரே நோக்கம், தான் இந்த நாட்டிலே ஜனாதிபதி வரிசையிலே இடம்பெற வேண்டும் என்பதற்காகவே என்று அனைவருக்கும் புலப்பட ஆரம்பித்துள்ளது.


இவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின்னர், எவ்வித அபிவிருத்தியும் ஏற்படவில்லை. யாரை ஒழித்து விட்டு நாடாளுமன்றத்திற்கு வந்தாரோ அந்த ராஜபக்ச குடும்பத்தினரைக் கட்டம் கட்டமாக நாடாளுமன்றத்திற்கு உள்வாங்கி, இப்போது பதவிகளையும் வழங்கிவருகிறார். பார்க்கின்றபோது ராஜபக்ச குடும்பத்தின் வம்சத்தைச் சார்ந்தவர் போல் தோன்றுகிறது.


படு பாதாளத்திற்குச் செல்லும் இந்த நாட்டை மீட்கக்கூடிய ஒரே ஒரு நபர் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தான். அவருடைய காலத்தில் நாட்டில் அபிவிருத்தி ஏற்பட்டது.


அனைத்து மக்களுக்குச் சுதந்திரமாக இருக்கக் கூடிய நிலை ஏற்பட்டது. சர்வதேசத்தின் தொடர்புகள் மற்றும் உதவிகள் நிறைந்து காணப்பட்டன.


எனவே, பசில் ராஜபக்ச போன்றவர்களை நாடாளுமன்றத்திற்குக் கொண்டு வந்தது போல், மீண்டும் சந்திரிகாவையும் கொண்டு வந்து இந்த நாட்டின் ஜனாதிபதியாக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.