Header Ads



இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளருகின்றது - தமிழக இந்துமக்கள் கட்சி


இலங்கையில் மதவாதம், பயங்கரவாதம் மற்றும் ஆயுத காலாசாரம் என்பவற்றை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் எனத் தமிழக இந்துமக்கள் கட்சியின் நிறுவுனர் அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார்.


இன்றைய தினம் (17.02.2023) வவுனியாவிற்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள அவர், ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.


மேலும் அவர் கூறியுள்ளதாவது, ‘தற்போது நிலவிவரும் பொருளாதார சிக்கல்களிலிருந்து மீண்டெழுவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசு மேற்கொள்ள வேண்டும்.


இலங்கைக்கு சர்வதேச நாடுகளின் உதவிகள் கிடைக்கப்பெறுகின்றது. இந்திய அரசும் பெரியளவில் இலங்கைக்கு உதவி வருகின்றது. குறிப்பாக வீதிகள், தொடருந்து பாதைகள், வீட்டுத்திட்டம் மற்றும் கடன்கள் என்று பிரதிபலனைக் கருதாமல் பல உதவிகளைச் செய்துவருகின்றது.


சீனாவும் பல விடயங்களை இங்கே செய்கின்றது, கொழும்பில் ஒரு கலாசார மண்டபத்தினை அமைத்து, அதன் நிர்வாகத்தை அவர்களே வைத்துள்ளனர்.


ஆனால், இந்திய அரசால் அமைக்கப்பட்ட கலாசாரமண்டபத்தின் நிர்வாகத்தை இலங்கை அரசிடமே ஒப்படைத்திருக்கின்றது. இருப்பினும் அதனை யாழ்ப்பாண மாநாகரசபையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.


மேலும், வறுமை, பொருளாதார பிரச்சினைகளிலிருந்து இலங்கை மக்கள் விடுபடவேண்டும். அதற்குரிய மேம்பாடான திட்டங்களை வகுத்து நல்லவிதமாகச் செயற்படுவதற்கான பிரார்த்தனைகளை நாம் செய்கிறோம்.


அத்துடன், இலங்கையில் மத அடிப்படைவாதம் வேகமாக வளர்ந்துவருகின்றது. இங்கு வசிக்கும் சிங்கள மக்களாக இருக்கலாம், தமிழ்மக்களாக இருக்கலாம் அனைவரும் மண்ணின் மைந்தர்கள். ஆனால் வெளிநாடுகளிலிருந்து வருகை தந்து மதமாற்றும் செயற்பாடுகள் இங்கு இடம்பெறுகின்றது.


அண்மையில் இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் உலகையே உலுக்கியிருந்தது. எனவே மதவாதம், பயங்கரவாதம் ஆயுத காலாசாரம் முடிவிற்கு வரவேண்டும். அமைதியான வளமான இலங்கை உருவாக வேண்டும்’ எனக் குறிப்பிட்டுள்ளார். 

No comments

Powered by Blogger.