Header Ads



அது இன்னும் ஆபத்தாக முடியும் - முஜிபுர் ரஹ்மான் mP


எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் 

பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்களின் ஒரு பகுதி.


சீனா,ஜப்பான்,இந்தியா ஆகிய நாடுகளுடன் உடன்படிக்கைக்கு சென்று அதனூடாக சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது நன்மை பயக்கும் என நேற்று (31) இடம்பெற்ற வைபவத்தில் ஜனாதிபதி தெரிவித்த கருத்தை இன்றைய பத்திரிகை செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளன.மேலும்,இந்த செயல்முறை எவ்வளவு வெற்றிகரமாக இருக்கும் என்று சொல்வது கடினம் என்றும்  கூறினார்.சர்வதேச நாணய நிதியத்திற்கு வருவதற்கு முன் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் குறித்த கடன் வழங்கிய நாடுகளுடன் உடன்படிக்கைக்கு வர வேண்டும் என்ற சர்வதேச நாணய நிதியத்தின் கதையின் மறுபக்கத்தையே அவர் கூறுகிறார்.

ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் சொல்லப்படுகிறது.இப்போது இவ்வாறு சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வது நன்மை பயக்கும் என ஜனாதிபதி கூறுகிறார்.


கடன் வாங்கிய நாடுகளுடன் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தங்களைச் செய்துவிட்டு, பிற்பாடு எங்களுடன் இணைந்து இந்தப் பணியைச் செய்யலாம் என்றே ஆரம்பத்திலிருந்தே ஐ.எம்.எப் கூறுகிறது. இப்போது அரசாங்கம் அவ்வப்போது தனது கதைகளை மாற்றிக்கொண்டிருப்பதைக் காண்கிறோம். முதலாவதாக,சர்வதேச நாணய நிதியத்துடன் அவர்கள் ஒருவித ஊழியர் மட்ட ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளனர் என்று கூறப்பட்டது. நேற்றைய தினம் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க, அவ்வாறான ஒப்பந்தம் எதுவும் கைச்சாத்திடப்படவில்லை எனவும், புரிந்துணர்வு மாத்திரமே ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.


சர்வதேச நாணய நிதியத்துடன் அரசாங்கம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் அவற்றை வெளிப்படுத்துவதிலும் நேர்மை இல்லாத் தனத்தையே காணக்கூடியதாக உள்ளது.


ஐ எம் எப்புடனான ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தையின் முடிவில் டிசம்பர்,ஜனவரி மாதங்களாகும் போது நிதியைப் பெற்றுக் கொள்ளலாம் என ஒரு கட்டத்தில் கூறுகின்றனர்.சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு முன்னர் சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் உடன்படிக்கைக்கு வர வேண்டும் என ஜனாதிபதி மறுபக்கம் கூறுகிறார். சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல் உடன்பாடற்ற ஒரு நிலையிலுள்ளதை புலப்படுத்துகிறது.


அரசாங்கத்தின் தலைவர்கள் சில சமயங்களில் முன்னுக்குப்பின் முரணான கதைகளைச் சொல்கிறார்கள்,அதில் இருந்து என்ன தெரிகிறது,இப்போது ரணில் விக்கிரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தையே நம்புகிறார். அதைவிடுத்து அவரிடம் எந்த வகையான வேலைத்திட்டமும் இருப்பதாக அரசாங்கம்  கூறுவதாக இல்லை. ஆனால் இந்தக் கதைகளைப் பார்க்கும் போது, ​​சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் அந்தப் பயணமும் தெளிவில்லாமல் இருப்பதைக் காணலாம்.


ஐ எம் எப் ஆக இருந்தாலும் சரி, மற்ற நாடுகளாக இருந்தாலும் சரி,நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்குவதே பிரதானமாக இருக்க வேண்டும் என்று ஆரம்பம் முதலே கூறி வந்தோம்.ஏனெனில் இன்று நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்பதை அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர்.


பாராளுமன்றத்தில் ஏற்பட்டுள்ள மாறுபட்ட நிலைமை,நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, இந்த அரசாங்கத்தின் மக்கள் ஆணையின் நிராகரிப்பு,60 இலட்சம் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல்,68 இலட்சம் பெற்றுக்கொண்டு பிரதமர் பதவியை இராஜினாமா செய்த மகிந்த ராஜபக்ச, மொட்டுவயைச் சேர்ந்தவர்கள் மூன்று தரப்பாக எதிர்க்கட்சியில் உள்ளனர்.இவ்வாறு இந் நாட்டில் அரசியல் ஸ்திரமற்ற நிலை ஏற்பட்டுள்ளதைக் காணலாம். நாம் என்ன செய்தாலும் நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மையை உருவாக்க வேண்டும்.


நாட்டில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தயாராக இல்லை என்பதையும் ராஜபக்சர்களையே ஸ்திரப்படுத்த தயாராகவுள்ளார் என்பதையுமே எம்மால் காணமுடிகிறது.


எல்லா இடங்களிலும் கூட்டங்களை நடத்தி ராஜபக்சக்களை மீண்டும் சாம்பலில் இருந்து எழு வைத்து ஒரு ஸ்திரத்தன்மையை உருவாக்கப் போவதற்கு துணைபோவதையே ரணில் விக்ரமசிங்கவிடமிருந்து நாம் காணக்கூடியதாகவுள்ளது.


கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களின் காலம் முடிவடைகிறது என்று கூறி வந்தோம்.தற்போது அமைச்சரின் அதிகாரத்தைக் கொண்டு உள்ளூராட்சித் தேர்தல் ஓராண்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்த ஆண்டு இறுதிக்குள் அந்த காலக்கெடுவும் முடிவடையும்.உள்ளூராட்சி மன்றங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால் அதை குறைக்க வேண்டும் என சில வாரங்களுக்கு முன்பு ஜனாதிபதி கூறினார்.


2012 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் தேர்தல் திருத்தத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டு அதற்கு தற்போதைய பிரதமர் தினேஷ் குணவர்தன தலைவராக நியமிக்கப்பட்டமை எமக்கு நினைவிருக்கிறது. அக்காலகட்டத்தில் இருந்த விருப்புரிமை முறைமையை திருத்தியமைப்பதற்காக பிரதேச மட்டத்தில் பிரதானமாக தினேஷ் குணவர்தன தலைமையில் சென்றே செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.


பத்து வருடங்கள் கடந்துள்ளன.பத்து வருடங்கள் தவிசாளராக பதவி வகித்து 2018 இல் புதிய தேர்தல் முறையை முன்னெடுத்தார். ரணில் விக்கிரமசிங்க நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமராகவும் அதனை  நடைமுறைப்படுத்தினார். தற்போது ஜனாதிபதி விஜயதாச ராஜபக்ச ஊடாக தேர்தல் திருத்தம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்குமாறு  சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதை நாம் காண்கிறோம்.


மீண்டும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாமல் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவை நியமித்து தேர்தலை ஒத்திவைக்கும் நோக்கிலையே அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.


தேர்தலை ஒத்திவைக்க முடியாது என ஆரம்பம் முதலே கூறி வந்தோம்.நவம்பர் இறுதிக்குள் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் என நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் ஆணைக்குழவின் தலைவரும் கூறியிருந்தாலும் தற்போதைய தேர்தல் ஆணையாளரை நீக்கிவிட்டு தமக்கு நெருக்கமான ஒருவரை நியமித்து இந்த செயற்பாட்டை முன்னெடுக்கப்போவதான தகவல்கள் வெளிவந்த வன்னமுள்ளது.


இந்த ஆட்சியின் மீது அதிலும் குறிப்பாக நாட்டு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பும், கோபமும், வெறுப்பும் காணப்படுகின்றது.இந்நாட்டை இங்கு கொண்டு வந்த இந்த ஆட்சியாளர்களுக்கு எதிராக இன்று மக்கள் தமது வெறுப்பையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்த காத்திருக்கின்றனர்.அதனால் தான் மக்கள் ஆர்ப்பாட்டம் நடந்தபோது போராட்டத்திற்கு வந்து மக்களுடன் இணைந்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.நமது நாட்டின் ஒரு அம்சம் தேர்தல், இதன் மூலம் மக்கள் தங்கள் எதிர்ப்பை தீவிரமாக வெளிப்படுத்துகிறார்கள்.

மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க இடமில்லை. தேர்தலை பிற்போடுவது என்பது இந்நாட்டின் ஜனநாயகத்தை அரசாங்கம் இன்னும் ஆபத்தில் ஆழ்த்துகிறது என்றே அர்த்தம்.இந்த அரசாங்க ஆட்சி மாற வேண்டும்.பல்வேறு சட்டங்களை கொண்டு வந்து தேர்தலை ஒத்திவைக்க விக்கிரமசிங்க ராஜபக்ச அரசு முனைந்தால்,அதனால் ஏற்படப் போகும் விளைவுகளை அரசாங்கம் நினைவில் வைத்துக் கொள்ள சொல்கிறோம்.அது இன்னும் ஆபத்தாக முடியும் என தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.