Header Ads



அடுத்த 2 வாரங்களில் எரிபொருள் விலை மேலும் குறைவடையும்


உலக சந்தையில் எரிபொருட்களின் விலை குறைவதற்கேற்ப அடுத்த இரண்டு வாரங்களில் எரிபொருள் விலை மேலும் குறைக்கப்படுமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேக்கர தெரிவித்துள்ளார். 


ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கின்ஸ் நெல்சன் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,


உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைப்பை தொடர்ந்து தேசிய மட்டத்தில் எரிபொருள் விலையை தீர்மானிக்க முடியாது. பெற்றோல் இறக்குமதியில் இலாபம் கிடைக்கப் பெற்றதால் விலை குறைக்கப்பட்டுள்ளது. நாட்டில் எரிபொருள் விநியோக கட்டமைப்பில் சிக்கல் காணப்படுகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவர். மசகு எண்ணெய் ஊடாக மாத்திரம் நாட்டின் ஒட்டுமொத்த எரிபொருள் தேவையை பூர்த்தி செய்ய முடியாது.


மொத்த எரிபொருள் தேவையின் 30 சதவீதமளவு மாத்திரம் தான் மசகு எண்ணெய் சுத்திரகரிப்பு ஊடாக பெற்றுக்கொள்ளப் படுகிறது. 70 சதவீதமளவு எரிபொருள் இறக்குமதி செய்யப்படுகிறது. உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடையும் போது தேசிய மட்டத்தில் எரிபொருளின் விலையை குறைக்க முடியாது.


டீசல் விநியோகத்தில் இதுவரை காலமும் வழங்கப்பட்ட நிவாரணம் நீக்கப்பட்டுள்ளது. டீசல் விநியோகத்தின் நிவாரணம் நீக்கப்பட முன்னர் ஒரு லிட்டர் டீசல் விநியோகத்தின் போது 30 ரூபா நட்டத்தை எதிர்க்கொள்ள நேரிட்டது.


ஆகவே தற்போது டீசலின் விலையை குறைக்க முடியாது. பெற்றோல் இறக்குமதியில் 70 சதவீத இலாபத்தை பெற்றுக்கொண்டுள்ளதால் பெற்றோல் விலை குறைக்கப்பட்டது என்றார்.

No comments

Powered by Blogger.