Header Ads



கோட்டாபய இலங்கைக்கு திரும்புவதை ரணில் தடுக்கிறாரா..?


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மீண்டும் இலங்கைக்கு வருவதை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக  அவரது நெருங்கிய அமைச்சர்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.


முன்னாள் ஜனாதிபதி தனது குடியுரிமையை இழந்து அமெரிக்கா திரும்ப முடியாமல் போயுள்ளது. எனினும், அமெரிக்காவில் உள்ள தனது மகனின் பாதுகாப்பு குறித்து கவலை கொண்ட முன்னாள் ஜனாதிபதி, நீண்ட நாட்களாக அமெரிக்கா செல்ல விரும்பவில்லை என தெரியவந்துள்ளது.


அங்கு செல்ல முடியாவிட்டாலும், அமெரிக்க குடியுரிமை பெற்றுள்ள அவரது மனைவி அயோமா ராஜபக்ஷ அங்கு செல்லலாம். ஆனால் இந்த நேரத்தில் கணவருடன் இருக்க அவர் முடிவு செய்துள்ளார்.


எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி மீண்டும் இலங்கைக்கு வரத் தயாராக இருப்பதாகவும், அதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது இலங்கை அரசாங்கத்தின் பொறுப்பாகும் எனவும்  அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.


எனினும், கடந்த வாரம் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்த கருத்து காரணமாக, தற்போதைய அரசாங்கம் முன்னாள் ஜனாதிபதிக்கு எந்தளவுக்கு வசதி செய்து கொடுக்க தயாராக உள்ளது என்பது கேள்விக்குறியாகியுள்ளது.


அமெரிக்காவின் வோல் ஸ்ட்ரீட் ஜேர்னர் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்ச்சைக்குரிய முறையில் கருத்து வெளியிட்டுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு வருவதற்கு இது சரியான தருணம் அல்ல என்று தெரிவித்துள்ளார். வரலாற்றில் மிக மோசமான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நாட்டில் மீண்டும் அரசியல் பதற்றம் தலைதூக்கக்கூடும் என்பதால், முன்னாள் ஜனாதிபதியின் இந்த நாட்டிற்கு தற்போதைக்கு விஜயம் செய்வதை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.


முன்னாள் ஜனாதிபதி விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக தமக்கு அறிவிக்கவில்லை எனவும், அவர் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக இதுவரை எவ்வித அறிகுறியும் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


இந்த நேர்காணலில் ஜனாதிபதி ரணில் கூறியதன் உண்மையான நோக்கம் தெளிவாக தெரியாவிட்டாலும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய இந்த நாட்டிற்கு வந்தால் மீண்டும் உள்நாட்டுக் கலவரம் ஏற்படும் என தற்போதைய ஜனாதிபதி மதிப்பிட்டுள்ளார்.


அமைதியின்மை ஏற்பட்டால், சர்வக்கட்சி கட்சி ஆட்சி அமைக்கும் முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படும். அவ்வாறு முடியாமல் போனால் சர்வதேச நிதியத்தில் இருந்து பெறப்படும் என எதிர்பார்க்கப்படும் கடன் திட்டத்தில் வெற்றி பெற முடியாதென குறிப்பிடப்படுகின்றது.

No comments

Powered by Blogger.