Header Ads



எரிபொருள் இன்மையால் சுயமாகவே முடங்கும் நிலையில் சிறிலங்கா



தற்போது இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம்  ஒக்டென் 95 வகை பெற்றோல், 3,000 மெட்ரிக் தொன் மாத்திரமே கையிருப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த கையிருப்பு மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே வெளியிடப்பட்டாலும், அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே அது போதுமானது இருக்குமென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரி ஒருவர் எமது செய்திச் சேவைக்கு கருத்து தெரிவித்தார்.

இது தவிர, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது ஒட்டோ டீசல், சுப்பர் டீசல் மற்றும் 92 ஒக்டேன் பெற்றோல் இருப்புக்கள் இல்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மேலும், லங்கா ஐஓசியிடம் சுமார் 10,000 மெட்ரிக் டன் டீசல் கையிருப்பில் உள்ளதென அறிக்கைகள் தெரிவிப்பதாக அவர் கூறினார்.

அடுத்த சில நாட்களுக்கு, தம்வசமுள்ள டீசல் கையிருப்பில்  சிலவற்றை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்கு வழங்க லங்கா ஐஓசி இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

டொலர் தட்டுப்பாட்டுக்கு மேலதிகமாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தொழில்முறையற்ற நிர்வாகமும் நாட்டில் ஏற்பட்டுள்ள பாரிய எரிபொருள் நெருக்கடிக்கு நேரடிக் காரணம் என எம்மிடம் கருத்து தெரிவித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் உரிய நேரத்தில் தீர்மானங்களை எடுக்காத காரணத்தினால் வேண்டுமென்றே நிலைமை மோசமாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை தொடர்ந்து செயற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்காமை  கூட்டுத்தாபனத்தின் பாரிய தவறு என அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார்.

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்ந்து இயங்கினால் நாளொன்றுக்கு 267 தாங்கி ஊர்தியளவு டீசல் உற்பத்தி செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சுத்திகரிப்பு நிலையமானது நாளொன்றுக்கு 12.5 கிலோகிராம் நிறையுடைய 7,500 எரிவாயு கொள்கலன்களுக்கு போதுமான எரிவாயுவையும், 116 பெற்றோல் தாங்கி ஊர்திக்கான பெற்றோலையும் உற்பத்திசெய்ய முடியும்

சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையமானது நாட்டின் மொத்த எரிபொருள் தேவையில் 35 சதவீதத்தை ஈடுசெய்கிறது

இதுகுறித்துதொடர்ந்தும் எம்மிடம் கருத்து தெரிவித்த குறித்த அதிகாரி, சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம் உற்பத்தி செய்யப்படும் மண்ணெண்ணெய், விமான எரிபொருள்,உலை எண்ணெய் போன்றவற்றின் இழப்பால் நாட்டில் எரிபொருள் நெருக்கடி இருமடங்காக அதிகரித்துள்ளது.

தற்போது நாட்டில் அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள் கையிருப்பு வழங்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் பொது மக்களுக்கு துண்டுச்சீட்டு முறை மூலம் எரிபொருளை வழங்குவதில் சிரமம் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் மின் தடைநேரம் நீடிக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இன்றைய மின்வெட்டு மூன்று மணிநேரமாக நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.