சஜித் பிரேமதாஸவுக்கு எழுத்து மூலம் அறிவித்த சம்பிக்க
இன்று முதல் எதிர்கட்சியில் சுயாதீன உறுப்பினராக செயற்படவுள்ளதாக, ஐ.ம.ச. பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக தெரிவித்துள்ளார்
இன்றைய (08) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றிய அவர், இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பில் தாம், சஜித் பிரேமதாஸவுக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக அவர் இதன் போது தெரிவித்தார்.
கடந்த 2018 மார்ச் 18ஆம் திகதி புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், அரசியல் கூட்டணி ஒன்றை ஏற்படுத்துவதன் அடிப்படையில் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்தோம். எந்தவொரு தனிநபருக்கு எதிரான கோபதாபங்களின் அடிப்படையில் நான் இந்த தீர்மானத்தை எடுக்கவில்லை. நான் எப்போதும் நம்பும் மனசாட்சி மற்றும் கொள்கைகளுக்கு இணங்கவே இந்த முடிவை எடுத்துள்ளேன்.
இவ்வேளையில் பாராளுமன்றத்தில் உள்ள அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிகள் முன்னெப்போதையும் விட இப்போது மிகவும் பொறுப்புடனும் நடைமுறை ரீதியாகவும் செயற்பட வேண்டூயுள்ளது. அதற்கு உகந்த சந்தர்ப்பத்தை உருவாக்குவதே இந்த சுயாதீன முடிவின் நோக்கமாக நான் கருதுகிறேன்.
இந்தச் செய்தி வெளியானதைத் தொடர்ந்து சில ஊடகங்கள் நான் அரசாங்கத்தில் அமைச்சுப் பதவியைப் பெறுவதற்காக இவ்வாறு செய்கிறேன் எனத் தெரிவித்துள்ளன. ஆனால் அதில் எவ்வித உண்மையும் இல்லை. இந்த அரசாங்கத்தில் எந்த அமைச்சுப் பதவியையும் வகிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. இந்த அரசாங்கத்தின் அடிப்படை மாற வேண்டும் என்று நான் கூறுகிறேன். வார்த்தையின் உண்மையான அர்த்தம் வழங்கும் வகையில், இது ஒரு சர்வ கட்சி அரசாங்கமாக, இடைக்கால அரசாங்கமாக அமைய வேண்டும்....
Post a Comment