Header Ads



நீதிமன்றம் உத்தரவிட்டும் தமது, கடவுச்சீட்டை ஒப்படைக்காத மஹிந்த


நீதிமன்ற உத்தரவுக்கு அமைய முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உட்பட பல அரசியல்வாதிகள் கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளதாக சட்டமா அதிபர் இன்று (08) நீதிமன்றத்தில் அறிவித்தார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவின் சார்பில் முன்னிலையான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் (ஏஎஸ்ஜி) ஆயிஷா ஜினசேன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த மாதம் 9ம் திகதி அமைதியான போராட்டக்காரர்கள் மீதான தாக்குதல் தொடர்பான நீதவான் விசாரணை கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, ரேணுகா பெரேரா மற்றும் கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மஹிந்த கஹந்தகம உள்ளிட்ட பலர் இதுவரையில் தமது கடவுச்சீட்டை நீதிமன்றக் காவலில் ஒப்படைக்கத் தவறியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ரேணுகா பெரேரா மற்றும் மஹிந்த கஹந்தகம ஆகியோர் தங்களுடைய கடவுச்சீட்டு தமது வீடு தீவைக்கப்பட்ட போது எரித்து நாசமாக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அறிவித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட பலருக்கு பயணத் தடை விதித்து மே 12ம் திகதி கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.