Header Ads



3 மாதங்களில் கொழும்பில் உணவு தட்டுப்பாடு ஏற்படும், தினமும் 350 மெட்ரிக் தொன் உணவு வீணடிக்கப்படுகிறது


 இன்னும் மூன்று மாதங்களில் கொழும்பு நகரில் உணவு தட்டுப்பாடு ஏற்படும் என கொழும்பு மேயர் ரோசி சேனாநாயக்க எச்சரித்துள்ளார்.

உணவு கையிருப்பு செப்டம்பர் மாதம் வரை மட்டுமே இருக்கும் என எச்சரிக்கை விடுத்த மேயர் ரோசி சேனாநாயக்க, கொழும்பு மாநகர சபை (CMC) விரைவில் நகருக்குள் 600 ஏக்கர் நிலத்தில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை பயிரிடத் தொடங்கும் என்று தெரிவித்தார்.

நகரத்தில் வசிப்பவர்கள் தங்கள் வீட்டுத் தோட்டங்களில் அத்தியாவசிய உணவுப் பயிர்களை வளர்க்க ஊக்குவிக்கப்படும் அதே வேளையில் பயிர்களை வளர்ப்பதற்கான விவசாயத் திட்டத்தைத் தொடங்க கொழும்பு மாநகர சபை திட்டமிட்டுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

“குறைந்த வருமானம் பெறும் கொழும்பு நகரத்தின் சனத்தொகையில் சுமார் 60 வீதமானவர்கள் உணவுப் பற்றாக்குறையினால் பாதிக்கப்படுவார்கள்.

நான் யாரையும் அச்சுறுத்த விரும்பவில்லை, ஆனால் வரவிருக்கும் நெருக்கடியை மக்களுக்கு தெரிவிக்கவும், மக்களை தயார்படுத்தவும் விரும்புகிறேன்” என்று அவர் கூறினார்.

இந்நிலையில், கொழும்பு நகரில் குறைந்த வருமானம் உள்ளவர்களுக்கு 3,000 ரூபா மதிப்பிலான நிவாரணம் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நகரவாசிகளின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக உலக உணவுத் திட்டம், உலகளாவிய உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் பிற நன்கொடை நிறுவனங்களுடன் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

மேலும், உணவுப் பொருட்களின் வீண்விரயம் தொடர்பில் கொழும்பு மாநகர சபை கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார். கொழும்பில் நாளாந்தம் 350 மெட்ரிக் தொன் உணவு வீணடிக்கப்படுகிறது.

நகரின் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவும் வகையில் இதை குறைக்க விரும்புகிறோம்,” என்று மேயர் கூறினார்.

மேலும், நகரில் முச்சக்கர வண்டி சாரதிகள் உட்பட அன்றாட வருமானம் ஈட்டும் பலர் பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளதாகவும் மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.