1700 மில்லியன் ரூபாவில் கூரகல புனிதபூமி அபிவிருத்தி - முஸ்லிம்கள் பயப்படவேண்டாம், ஜெய்லானி பள்ளிவாசல் அபிவிருத்தியில் மௌனம்
கடந்த வெசாக் நோன்மதி தினத்தன்று 15 ஆம் திகதி கூரகல புனித பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட பிரமாண்டமான தாது கோபுரம், போதிய, தர்ம மண்டபம் உட்பட பல நிர்மாணங்கள் திறந்து வைக்கப்பட்டன. நிகழ்வில் இராணுவ தளபதி சவேந்திர சில்வா உட்பட அரச அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கடந்த 15ஆம் திகதி இடம்பெற்ற வெசாக் அரச தேசிய நிகழ்வில் சுமார் ஒன்றரை இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர். இதே வேளை மறுதினமான கடந்த 16 ஆம் திகதி சுமார் 6 இலட்சம் மக்கள் புனித பூமியை தரிசிக்க வருகை தந்ததாக வத்துகும்புரே தம்மரதன தேரர் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்; கூரகல புனிதபூமி பெளத்தர்களுக்கு சொந்தமானதாகும். இங்கு அனைத்து மக்களும் இன, மத பேதமின்றி வந்து தரிசிக்கலாம்.
இப்பிரதேசம் தலதா மாளிகை மற்றும் ருவன் வெலிசாய, சிவனொளி பாதமலை போன்றதாகும்.
இங்கு அமைந்துள்ள ஜெய்லானி பள்ளிவாசலை அபிவிருத்தி செய்வதற்கு நான் திட்டமிட்டிருந்தேன். அங்குள்ள தகரக் கொட்டிலை அகற்றிவிட்டு தொழுகை மண்டபத்தை எனது செலவில் அமைத்துத் தருவதாகக் கூறினேன். சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடிதமும் அனுப்பி வைத்தேன். வெசாக் நோன்மதி தினத்தன்றே பள்ளிவாசலையும் தொழுகை மண்டபத்தையும் திறந்து வைக்கவிருந்தேன். ஆனால் சம்பந்தப்பட்டவர்கள் ஒத்துழைக்காது மெளனமாகவே இருந்து விட்டனர்.
முஸ்லிம்கள் பயப்படவேண்டாம். கூரகல பெளத்த புனித பிரதேசத்துக்கு வருகை தாருங்கள். பெளத்த நிர்மாணங்களைப் பார்வையிடுங்கள். முஸ்லிம்களுடன் எனது நட்புறவு பலமாக இருக்கிறது. தொல்பொருள் பிரதேசங்களையும் புனித பிரதேசங்களையும் நாம் பாதுகாக்க வேண்டும்.
கூரகல பெளத்த புனித பிரதேசத்தை நிர்மாணிப்பதற்கு நாங்கள் அரசாங்கத்திடமிருந்து உதவி பெற்றுக்கொள்ளவில்லை. எமது மக்களே 1700 மில்லியன் ரூபாய்களை திரட்டினார்கள் என்றார்.- Vidivelli
Post a Comment