Header Ads



சுவிஸ் முழுவதும் இன்று நள்ளிரவு முதல், ஏப்ரல் 19 வரை அவசரகாலநிலை


கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்துள்ளது.

அந்நாட்டு ஜனாதிபதி இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்படி, நள்ளிரவு முதல் அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்படவேண்டும் எனும் நடவடிக்கையினை சுவிட்ஸர்லாந்து நாட்டின் அதிபர் இன்றைய சிறப்பு ஊடகவியலாளர் நேர்கணாலில் அறிவித்தார்.

நாளாந்தப்பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களைக் கொள்வனவு செய்யக்கூடிய கடைகள் மட்டுமே திறந்திருக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

அவசரகாலப் பிரகடனம் இத்தலைமுறைக்குப் புதிதாகவே அமைந்துள்ளது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னர் இவ்வகையான நடவடிக்கையினை சுவிட்ஸர்லாந்து எடுத்திருக்கின்றது.

நடுவன் அரசு இன்று அறிவதித்திருக்கும் அவசரகால நடவடிக்கையினை அமுல்படுத்த முன்னர், சில மாநிலங்கள் இதனைத்தன் முனைப்பில் நடைமுறைப்படுத்தியிருந்தன.

அத்துடன் 19. 04. 2020 வரைக்கும் நீத்தார்கடன் (மரணச்சடங்கு) தவிர்ந்த அனைத்து நிகழ்வுகளையும் இடைநிறுத்த வேண்டியுள்ளது.

நோய் தொற்றின் பரவல் வேகத்தினைக் கட்டுப்படுத்த இத்தகைய வரலாறுகாணத நடைமுறையினை சுவிட்ஸர்லாந்து மேற்கொள்ளவேண்டியுள்ளது எனவும் விளக்கப்பட்டுள்ளது.

அனைத்துக்கடைகளும், உணவகங்களும், மதுபானசாலைகளும், அதுபோல் பொழுதுபோக்கு நிறுவனங்களும் உடன் மூடப்படுகின்றன.

விதிவிலக்கு அளிக்கப்பட்டு திறந்திருக்கக்கூடிய நிறுவனங்கள் உணவுப்பொருள் அங்காடிகள் மற்றும் உடல்நலன் பேணும் மருத்துவமனை மற்றும் மருந்தகங்களும் ஆகும்.

இவ் அவசரகால நடவடிக்கையின் பயன் அனைத்து மாநிலங்களும் நடுவன் அரசின் அறிவித்தலை அப்படியே நடைமுறைப்படுத்த கடமைப்படுகின்றன.

மாநிலங்களின் தனித்துவ சுயாட்சி உரிமைகள் நடுவன் அரசின் அவசரகால நிலையில் மட்டுப்படுகின்றன.

சுவிஸ் நாட்டின் ஐந்து முனைகளில் அமைந்திருக்கும் எல்லைகளிலும் உள்நுழைவுச் சோதனை எல்லைக்காவற்துறையால் மேற்கொள்ளப்படுகின்றது.

8000 இராணுவ வீரர்கள் எல்லைச் சோதனைகளிலும் காவற்துறைக்கு துணையாகவும், வழங்கற்பிரிவிலும் பணியாற்றப் பணிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சுவிஸ் வாழ் மக்கள் போதிளவு இடைவெளி விட்டுக் கொள்வதுடன் இச்சூழலின் கடுமை நிலையினை புரிந்துணர்வுடன் எதிர்கொள்ளவும் நடுவன் அமைச்சர்கள் கேட்டுக்கொண்டனர்.

இந்நடவடிக்கைகள் எமது உடல் நலனைப்பேணுவதை முதன்மை நோக்காகக் கொண்டுள்ளது.

சுவிசின் தற்போதைய நல்வாழ்வுத் துறையின் (சுகாதரத்துறையின்) வலுவினை தக்கவைத்துக் கொள்வதை இலக்காகக் கொண்டுள்ளது.

தேவையற்று பொருட்களைக் களஞ்சியப்படுத்தாதீர்

சுவிஸ் அரசு 100 கோடி சுவிஸ்பிராங்குகளை இப்பேரிடர் கால அவசர உதவிக்காக ஒதுக்கி உள்ளது. இவை சிறு மற்றும் நடுநிலை நிறுவனங்கள் எதிர்கொள்ளும் நட்டததை ஈடுசெய்வதற்கு ஒதுக்கப்பட்ட தொகை ஆகும்.

சுவிட்ஸர்லாந்து அரசு இதைவிடப் பெரிய தொகை அடுத்த கட்டநடவடிக்கைக்கு தேவைப்படும் என்பதை உணர்ந்திருப்பதாகவும், தேவைக்கேற்ப கூடுதல் நிதியினை எதிர்காலத்தில் ஒதுக்க இருப்பதாகவும் சுவிஸ் அதிபர் அறிவித்தார்.

நலவாழ்வு (சுகாதார) அமைச்சர் சுவிஸ் வாழ் மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை,

“தயவுசெய்து வீணாகப் பொருட்களை வீடுகளில் வேண்டி அடுக்காதீர்கள். அத்தியாவசியப் பொருட்களை நீங்கள் களஞ்சியப்படுத்தத்தேவையில்.

அனைவருக்கும் எப்போதும் போதியளவு பொருட்கள் கிடைக்கும் அளவிற்கு நாம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வோம்.

சுவிட்ஸர்லாந்தின் வாழ்வின் வேகம் குறைக்கப்பட்டு வட்டம் சுருக்கப்படுகின்றதே தவிர, வாழ்வு நிறுத்தப்படவில்லை. ஆகவே உங்கள் ஒத்துழைப்பினை வழங்க வேண்டுகின்றேன் என கோரிக்கை விடுத்தார“.

நடைமுறைக்குவரும் அவசரகாலச் நடைமுறையின்படி இனி மாநிலத்திற்கு மாநிலம் நடவடிக்கைகளில் வேறுபாடு இல்லை. 19. 04. 2020 வரை சுவிஸ் முழுவதும் அவசரகால நடைமுறையே அமுலில் இருக்கப்போகின்றது.

No comments

Powered by Blogger.