Header Ads



21 மில்லியன் ரூபா மாதாந்தம் செலுத்தப்பட்ட அமைச்சின் கட்டிடம்

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (16) ஆஜராகியிருந்தார்.

விவசாய அமைச்சின் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் இராஜகிரியவில் உள்ள கட்டடத்தைக் குத்தகைக்கு வழங்கியமை தொடர்பிலான விசாரணைகளுக்காக பிரதமர் அழைக்கப்பட்டிருந்தார்.

இன்று காலை 9.30 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பிரதமர் ஆஜரானதுடன் முற்பகல் 11 மணி வரை சாட்சியம் வழங்கியிருந்தார்.

பின்னர் சிறிது நேரத்திற்கு பிரதமர் ஆணைக்குழுவில் இருந்து வௌியேறியதுடன், மீண்டும் பிற்பகல் 1.30 மணிக்கு ஆணைக்குழவிற்கு சென்றிருந்தார்.

4 மணித்தியாலத்திற்கும் அதிக நேரம் சாட்சியம் வழங்கியதன் பின்னர் பிற்பகல் 4.15 மணியளவில் ஆணைக்குழுவிலிருந்து பிரதமர் வௌியேறினார்.

இன்று ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் தௌிவுபடுத்தப்பட்ட விடயங்களின் அடிப்படையில் விவசாய அமைச்சிற்காக இராஜகிரிய கட்டடத்தைப் பயன்படுத்துவதற்காக அரசாங்கம் 2 பில்லியனுக்கும் அதிக தொகையை செலவிட்டுள்ளது.

அதன்மூலம் எதிர்பார்த்த பிரதிபலன் கிடைக்கவில்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க, ஆணைக்குழு முன்னிலையில் ஏற்றுக்கொண்டுள்ளார்.

கட்டத்திற்கான குத்தகை உடன்படிக்கை 5 வருடங்களுக்காக கைச்சாத்திடப்பட்டுள்ளது.

எனினும், நிதி ஒழுங்குகளுக்கு அமைய அரச நிறுவனம் ஒன்றுக்காக 3 வருடங்களுக்கே அவ்வாறான உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட முடியும்.

அது தொடர்பில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கவனம் செலுத்தப்பட்டதுடன், ஒழுங்குகளுக்கு புறம்பாக அமைச்சரவை அனுமதியுடன் செயற்படும் சந்தர்ப்பங்கள் காணப்படுவதாக பிரதமர் இங்கு கூறியுள்ளார்.

கட்டடத்திற்கான குத்தகை உடன்படிக்கைக்கு சட்டமா அதிபரின் ஆலோசனையும் பெறப்படவில்லை.

அது அத்தியவசிய செயற்பாடு என்பதனை பிரதமர் இங்கு ஏற்றுக் கொண்டுள்ளார்.

இதேவேளை, இராஜகிரிய கட்டடம் தொடர்பிலான மேலும் பல பிரச்சினைகள் இன்று ஆணைக்குழுவில் அம்பலமாகியுள்ளது.

இயற்கைக் காற்று கிடைப்பதற்காக கட்டட வியூகம் காணப்படாமை, வாகனத் தரிப்பிட வசதி இல்லாமை போன்றவை அதில் முக்கியமானவைகளாகும்.

அத்துடன், இந்தக் கட்டடத்தின் உரிமையாளர்களான உபாலி ஜயசிங்க மற்றும் தக்‌ஷின ரணசிங்க ஆகியோர் இந்தக் காணி தொடர்பில் வழங்கின் தரப்பினர் எனவும் இந்தக் கட்டடம் அனுமதியற்ற கட்டடம் எனவும் இங்கு தெரியவந்துள்ளது.

10 மாடிகளைக் கொண்ட இந்தக் கட்டத்திற்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் 7 மாடிகளுக்கு மாத்திரமே அனுமதி கிடைத்துள்ளது.

இவ்வாறான ஒரு இடத்தில் அரச நிறுவனம் ஒன்று ஏன் ஸ்தாபிக்கப்பட்டது என பிரதமரிடம் ஆணைக்குழு கேள்வி எழுப்பியுள்ளது.

கட்டடத்தின் உண்மையான நிலைமையை உரிமையாளர்கள் அரசாங்கத்திற்கு மறைத்துள்ளதாக இதன்போது தெரியவந்துள்ளது.

இதனை அறிந்திருந்தால் இந்தக் கட்டடத்தை விட்டு வேறு மாற்று வழிமுறைகளை பின்பற்றியிருக்க முடியும் என பிரதமர் இங்கு கூறியுள்ளார்.

பிரதமரின் செயலாளர் பிரதம குழுவினால் சிபார்சு செய்யப்பட்ட 3 கட்டடங்களை ஆராய்ந்து, அதில் தகுதியான இடத்தை வாடகை அடிப்படையில் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு தான் ஆலோசனை வழங்கியதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதன்பின்னர் எடுக்கப்பட்ட தீர்மானங்கள மற்றும் செயற்பாடுகள் அமைச்சின் விருப்பத்திலும் அவர்களின் கீழ் இடம்பெற்றதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இந்தக் கட்டடம் அரச கொள்முதல் செயற்பாட்டிற்கு புறம்பாகவே தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

விடத்திற்குப் பொறுப்பான அமைச்சர் தனது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றியுள்ளாரா என பிரதமரிடம் ஆணைக்குழு வினவியுள்ளது.

பிரதமர் என்ற வகையில் அமைச்சர் தொடர்பில் தனக்கு எதனையும் கூற முடியாது என பிரதமர் பதிலளித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் நம்பிக்கைத் துரோகம் செய்துள்ளாரா என ஆணைக்குழுவின் தலைவர், பிரதமரிடம் வினவியுள்ளார்.

அதற்கு பிரதமர் உரிய பதிலை வழங்கவில்லை.

இராஜகிரிய கட்டத்தின் மாதாந்த குத்தகை 21 மில்லியன் ரூபாவாகும்.

எனினும், அதற்கான அரசாங்கத்தின் மதிப்பீட்டுத் தொகை 13 மில்லியன் ரூபாவாகும்.

சேவைக் கட்டணத்தையும் சேர்த்தே 21 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டதாக பிரதமர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி பயன்படுத்தாத குறித்த கட்டடத்திற்கு ஒரு வருடத்திற்கும் நான்கு மாதங்களுக்குமான கூலியை செலுத்தி அரசாங்கம் அந்தக் காலத்திற்குள் சேவைக் கட்டணத்தையும் செலுத்தியுள்ளது.

பயன்படுத்தாக கட்டடத்திற்காக சேவைக் கட்டணம் எவ்வாறு செலுத்துவது என ஆணைக்குழு பிரதமரிடம் வினவியுள்ளது.

அது அவ்வாறு இடம்பெற்றிருக்கக் கூடாது என பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதமர் சார்பில் ஆணைக்குழு முன்னிலையில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ரொலன்டி சி பெரேராவிற்கு ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் கடுமையாக அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.

பிரதமர் முறையாக பதில் வழங்கிக் கொண்டிருக்கும்போது அதில் தலையிட முற்பட்டமையினாலே அவருக்குக் கடுமையாக அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.


2 comments:

  1. குப்பையைத் தோண்டத் தோண்ட வருவது துர்நாற்றமும்,ஆட்சியாளர்கள் மக்கள் சொத்தைத் திட்டமிட்டுக் களவாடிய துர்நடத்தையும்,துஷ்பிரயோகமும் மட்டும்தான்.இந்த ஒருகுற்றத்துக்ேக இந்த நபரை ஆயிரம் வ ருடம் சிறையில் தள்ளப்படவேண்டும்.அத்துடன் நட்டமடைந்த பொதுமக்களின் பணத்தைத் திருப்பிக் கொடுக்காவிட்டால் அந்த பணத்தை அரச திறைசேரிக்கு திருப்பிஎடுக்க உச்ச கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படவேண்டும்.

    ReplyDelete
  2. அப்போ எல்லாம் சுத்த கள்ளன்கள் தானே

    ReplyDelete

Powered by Blogger.