மைத்திரிபாலவை நம்பியதால், சகலதையும் இழந்துவிட்டேன் - ஜீ.எச்.புத்ததாச
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மைத்திரிபால சிறிசேன விடுத்த கோரிக்கையை ஏற்று அவருக்கு ஆதரவளித்ததால், 21 வருடங்களாக வகித்து வந்த தலைவர் பதவி, மேயர் பதவி என அனைத்தையும் இழந்து விட்டதாக கடுவலை மாநகரசபையின் முன்னாள் மேயர் ஜீ.எச்.புத்ததாச தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்பு நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து விலகினாலும் பரவாயில்லை. அமைப்பாளர் பதவியை வைத்து கொண்டு என்ன செய்வது?.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேன, “புத்தே எங்கள் அணிக்கு வா” என்றார். நான் அவரது சொல்லை கேட்டு அவருடன் சென்றேன். இறுதியில் என்ன நடந்தது?.
நான் 21 வருடங்களாக வகித்து வந்த தலைவர் பதவி, மேயர் பதவியை இழந்து படுதோல்வியடைந்தேன்.
மகிந்தவுடன் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்திருந்தால், நான் தான் இன்று கடுவலை மேயர். எம்மை பற்றி யார் சிந்திப்பது?” என புத்ததாச கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தனித்து போட்டியிட வேண்டும்.
இன்னும் நான்கு/ ஐந்து மாதங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த தொகுதி அமைப்பாளர்களில் 65 வீதமானோர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாக்கும் அமைப்புடன் இணைவார்கள் எனவும் புத்ததாச மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment