காவியுடை அணிந்து, பௌத்தத்தை அவமதித்த ஞானசாரர் - சாடுகிறார் தலதா
-எம்.ஆர்.எம்.வஸீம்-
நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானது. அதில் தமிழ், சிங்களம், முஸ்லிம் என பேதம் இல்லை என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.
பலாங்கொடை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில்,
நாட்டில் இருக்கும் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகும். மதங்கள் அடிப்படையில் அதில் எந்த பேதமும் இல்லை. தமிழ், சிங்களம், முஸ்லிம் என்றோ அந்த மதங்களைச்சேர்ந்த மதத்தலைவர்களுக்கு என்றோ சட்டத்தில் எந்த விட்டுக்கொடுப்பும் இல்லை. பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை விதிக்கப்பட்ட மதத்தலைவர்கள் பலர் சிறைத்தண்டனையை அனுபவித்து வருகின்றனர்.
கடந்த வாரங்களில் நாட்டில் பெளத்த தேரர் ஒருவர் தொடர்பாக பாரியளவில் பேசப்பட்டு வந்தது. நானும் கொள்கையை மதிக்கும் ஒரு பெளத்தர். எவருக்கும் எதனையும் பேசலாம். என்றாலும் நாட்டின் சட்டம் அனைவரும் ஒன்றாகும். இதுவரைக்கும் பல்வே று குற்றச்சாட்டுக்களுக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 15 பெளத்த தேரர்கள் சிறையில் இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் சிறைச்சாலை ஆடையிலே இருக்கின்றனர். மேலும் 11 பேர் சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அதேபோன்று கத்தோலிக்க மதத்தலைவர் ஒருவர் சிறைச்சாலை ஆடையில் இருக்கின்றார். இரண்டுபேர் சந்தேக பட்டியலில் இருக்கின்றனர். முஸ்லிம் மதத்தலைவர் ஒருவர் சிறைச்சாலை ஆடையில் சிறையில் இருக்கின்றார். இரண்டுபேர் சந்தேக நபர்களாக இருக்கின்றனர். இந்து குரு ஒருவர் சிறைச்சாலை ஆடையில் இருப்பதுடன் மேலும் இரண்டுபேர் சந்தேக நபர்களாக இருக்கின்றனர்.
நாங்கள் அனைத்து மதங்களையும் மதித்து நடக்கின்றோம். அதனால்தான் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால் அவர்களின் மத ஆடையை அகற்றி சிறைக்குள் செல்ல நேரிடுகின்றது. நாட்டில் இருக்கும் சட்டத்தை மதித்து வாழவேண்டும் என புத்தபெருமான் போதித்திருக்கின்றார். அதனால் தேரர்களின் ஆசிர்வாதம் எப்போதும் எங்களுக்கு அவசியமாகும். அந்த ஆசிர்வாதத்தை எங்களுக்கு வழங்க முடிவது, அவர்களின் உள்ளத்தில் வைராக்கியம் குரோதம் , சண்டித்தனம் இல்லாமல் போனால் மாத்திரமேயாகும்.
நான் நீதி அமைச்சர் என்பதற்காக யாரையும் சிறையிலடைக்க உத்தரவிடமுடியாது. இன்று நீதிமன்றங்கள் சுயாதீனமாக செயற்படுகின்றன. நீதிமன்றத்துக்குள் தொலைபேசி அலறினால் 7 நாட்களுக்கு சிறைத்தண்டனை அல்லது தண்டப்பணம் விதிக்க நீதிவான் கட்டுப்பட்டுள்ளார்.
அவ்வாறான நிலையில் நீதிமன்ற அறை ஒன்றுக்குள் பெரிய சமூகம் ஒன்றை அகெளரவப்படுத்தும்வகையில் காவி உடையை அணிந்துகொண்டு புத்த சாசனத்தை அவமதிக்கும்வகையில் நடந்துகொண்ட தேரர் தொடர்பில் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. அதற்கு என்னால் ஒன்றும் செய்யமுடியாது. ஏனெனில் நாட்டின் சட்டம் அனைவருக்கும் பொதுவானதாகும் என்றார்.
Yes! your are correct madam....but.....others are ...
ReplyDeleteதண்டனை பெற்ற ஒருவர் சுதந்திரமாக சிறையிலிருந்து வெளியேறும் போது எப்படி நீதி மன்றங்கள் நீதித்துறை போன்றன சுயாதீனமாக இயங்க முடியும்?
ReplyDelete