ரணில் இழைத்த, பெரும் தவறு - ரஞ்ஜன்
ஜனாதிபதியை நாமே நியமித்தோம். ஆகவே திருட்டுக் கும்பலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒன்று சேர விடமாட்டோம். அதற்காக உயிரையும் தியாகம் செய்து போராடுவோம் என பிரதி யமைச்சர் ரஞ்ஜன் ராமநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் அமைச்சர்களான ராஜித சேனாரத்ன மற்றும் சம்பிக்க ரணவக்க ஆகியோரின் எதிர்ப்பை மீறி மத்திய வங்கியின் ஆளுநராக அர்ஜூன மகேந்திரனையும் நிதி அமைச்சராக ரவி கருணாநாயக்கவையும் நியமித்தமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இழைத்த பெரும் தவறாகும் .
எனினும் பிரதமர் தெரிவு செய்த அதிகாரிகளின் தவறுக்கு அவர் பழியல்ல என்றும் அவர் குறிப்பிட்டார்.
பிட்ட கோட்டையில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்,
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் நாம் சரிந்து போகவில்லை. ஏனெனில் 2015 ஆம் ஆண்டு எமக்கு ஆதரவு வழங்கியவர்களின் வாக்குகளை ஒன்றிணைத்து பார்த்தால் மஹிந்த ராஜபக்ஷவை விடவும் நாமே முன்னிலையில் உள்ளோம். எனினும் மஹிந்த ராஜபக்க்ஷ குறுகிய காலத்தில் முன்னேற்றம் கண்டுள்ளார்.
வட்டார பங்கீட்டின் காரணமாக ஏற்பட்ட முரண்பாடுகளே பிரிந்து போட்டியிட காரணமாகும்.
ஜனாதிபதியை நாமே நியமித்தோம். ஆகவே திருட்டு கும்பலுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஒன்று சேர விடமாட்டோம். அதற்காக உயிர்த் தியாகம் செய்து போராடுவோம். கொலை, கொள்ளைக்காரர்கள் இருப்பதனாலேயே மோடி போன்று ஆடை அணிந்து வாசம் பூசிக்கொண்டு எம்முடன் இணைந்து மேடை ஏறினார். இந்நிலையில் அவர் மீண்டும் அந்த கும்பலுடன் இணைவாரா?. அது ஒருபோதும் நடக்காது.
கூட்டு எதிரணியுடன் இணைந்து சுதந்திரக்கட்சியின் ஆட்சியை அமைக்க வேண்டும் என சுதந்திரக்கட்சியின் ஆலோசனையை கேட்பார் என்று நான் நம்பமாட்டேன். கூட்டு எதிரணியுடன் இணைய மாட்டார். அவரை தோற்கடித்ததும் அவர்களேயாகும்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்கள், அமைச்சர்கள் ஆகியோரின் செயற்பாடுகளில் குறைபாடுகள் இருக்கலாம். எனினும் அதனை நாம் சரி செய்வோம் என்றார்.
(எம்.எம்.மின்ஹாஜ்)
Post a Comment