நல்லாட்சியாளர்களிடம் இனத்துரோக, எண்ணம் உள்ளது - மஹிந்த
2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா யோசனையை முழுமையாக செயற்படுத்துவதற்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் உறுதிமொழி வழங்கியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
இயல்பாகவே உள்ள இனத்துரோக எண்ணமே இந்த யோசனையை ஏற்றுக் கொள்வதற்கு காரணம்அன்றி வேறு காரணங்கள் எதுவும் நல்லாட்சியாளர்களுக்கு இல்லை என்று அவர் கூறியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,
2015ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நிறைவேற்றப்பட்ட ஜெனிவா தீர்மானத்தின் ஊடாக, வௌிநாட்டு நீதிபதிகள் மற்றும் விசாரணையுடன் கூடிய போர்க்குற்ற நீதிமன்றம் ஒன்றை உருவாக்குவதற்கு மற்றும் பயங்கரவாதத்தை தடுக்கும் சட்டத்தை நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மேற்கத்திய பலமிக்கவர்கள் ஏற்றுக் கொண்ட புதிய சட்டம் ஒன்றை உருவாக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மீண்டும் உறுதியளித்துள்ளது.
எமது படையினருக்கு எதிராக விசாரணை செய்ய வௌிநாட்டு நீதிபதிகள் அழைக்கப்பட மாட்டார்கள் என்று ஜனாதிபதியும் பிரதமரும் இலங்கை மக்களுக்கு மீண்டும், மீண்டும் கூறிய போதிலும், ஜெனிவாவில் அவர்கள் கடந்த வாரம் வழங்கிய உறுதி மொழி இதற்கு மாறானதாகும் என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.
2015ம் ஆண்டு மற்றும் மீண்டும் 2017ம் அண்டில் இணை அனுசரனை வழங்கி ஏற்றுக்கொள்ளப்பட்ட அந்தப் பிரேரணையில், பொதுமக்களை கொலை செய்தல், சித்திரவதை செய்தல், பாலியல் வன்முறை, கடத்தல்கள், பொதுமக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் கிடைக்காதிருக்க திட்டமிடல் போன்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் எமது படையினருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் இதுபோன்ற அறிக்கைகளை நல்லாட்சியாளர்கள் எற்றுக் கொள்வதற்கு காரணம் இயல்பாகவே அவர்களிடம் உள்ள இனத்துரோக எண்ணமே அன்றி வேறு காரணங்கள் எதுவுமில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வௌியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Post a Comment