மைத்திரியை ஓரங்கட்டி, ரணிலை பலப்படுத்த மகிந்த திட்டம்..?
அரசியலில் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கும் வியூகமொன்றை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வகுத்து வருவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமது அரசியல் எதிர்காலத்தை உறுதி செய்து கொள்ளும் நோக்கில் கூட்டு அரசாங்கத்திற்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ புதிய வியூகம் ஒன்றை வகுத்துள்ளார்.
நல்லட்சி அரசாங்கத்தின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையில் விரிசலை ஏற்படுத்தின் அதன் வழியாக, தாம் அரசியலுக்குள் மீளவும் வலுப்பெறும் முயற்சியில் மஹிந்த ஈடுபட்டுள்ளார்.
குறிப்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அரசியல் ரீதியாக தனிமைப்படுத்தி அரசியலிலிருந்து ஓரம் கட்டும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றார்.
இதன் ஓர் கட்டமாகவே பிரதமர் சீனாவிற்கு விஜயம் செய்ய முன்னதாக, பாராளுமன்ற வளாகத்தில் வைத்து பிரதமர் ரணிலை, மஹிந்த ராஜபக்ஸ சந்தித்திருந்தார்.
மஹிந்தவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து இந்த சந்திப்பில் பேசப்பட்டதாக ஊடகங்களில் பரவலாக செய்தி வெளியிடப்பட்டாலும் உண்மையில் இரண்டு விடயங்கள் பற்றி இந்த சந்திப்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல் மற்றும் சீன விஜயம் தொடர்பிலேயே இந்த சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்வது தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாடு என்ன என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, பிரதமரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன்போது தேர்தலில் வாக்குறுதி அளித்ததனைப் போன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்பட வேண்டுமெனவும், இது குறித்த உத்தேச வரைவுத் திட்டமொன்று சுதந்திரக் கட்சியிடம் ஏற்கனவே ஒப்படைக்கப்பட்டள்ளது எனவும் பிரதமர் ரணில் பதிலளித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யும் முனைப்புக்களுக்கு எதிர்க்கட்சி பூரண ஆதரவளிக்கும் என மஹிந்த இதன்போது உறுதியளித்துள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவைக் கொண்டே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் எதிர்காலத்தை சூன்யமாக்கும் சூழச்;சித் திட்டமொன்றை மஹிந்த மிகவும் சாணக்கியமான முறையில் மேற்கொண்டு வருகின்றார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்தல் குறித்த மஹிந்தவின் கருத்துக்கு மைத்திரிக்கு ஆதரவான தரப்பினர் எதிர்ப்பையும் அதிருப்தியையும் வெளியிட்டுள்ளனர்.
கூட்டு எதிர்க்கட்சியின் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச, தினேஸ் குணவர்தன போன்றவர்கள் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படுவதற்கு எதிர்ப்பை வெளியிட்டு வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்ய கூட்டு எதிர்க்கட்சி ஆதரவளிக்கும் என ரணிலிடம் மஹி;ந்த அளித்த வாக்குறுதி ஊடாக, ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக மஹிந்த ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்ளும் சூழ்ச்சித் திட்டம் அம்பலமாகியுள்ளது.
மைத்திரிக்கும் ரணிலுக்கும் இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்துவதன் மூலம், மைத்திரியின் அரசியல் எதிர்காலத்தை இ;ல்லாமல் செய்ய முயற்சிக்கப்படுகின்றது.
மேலும் மஹிந்த ராஜபக்ஸ குடும்பத்தி;ற்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படுவதனை தடுக்கும் ஓர் தந்திரோபாயமாக ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்க மஹிந்த தரப்பு முனைப்பு காட்டி வருகின்றது. பிரதமர் வேட்பாளராக போட்டியிட மஹிந்த ராஜபக்ஸ உத்தேசித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலின் போது மைத்திரி மஹிந்த தரப்பிற்கு இடையிலான பிளவு காரணமாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தோல்வியைத் தழுவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மஹிந்த மைத்திரி ஆகிய இரண்டு தரப்புக்களின் தோல்வி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதி செய்யும், அவ்வாறு ரணிலின் வெற்றியை உறுதி செய்ய சுதந்திரக் கட்சியில் பிளவினை ஏற்படுத்தும் சூழ்ச்சித் திட்டத்தை மஹிந்த மேற்கொள்ள உள்ளார்.
இதன் ஊடாக ரணில் விக்ரமசிங்கவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு தமது குடும்பத்தாருக்கு எதிரான அனைத்து விசாரணைகளையும் மூடி மறைக்க மஹிந்த ராஜபக்ஸ திட்டமிட்டுள்ளார்.
எவ்வாறெனினும், நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்துசெய்வது குறித்து பாராளுமன்றம் தீர்மானிக்க வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஐக்கியம் மற்றும் வெற்றியை விடவும் தமக்கும் தமது பிள்ளைகள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை பெற்றுக்கொள்வதில் மஹிந்த ராஜபக்ஸ அதிக கரிசனை கொண்டுள்ளார்.
வசீம் தாஜூடீன் படுகொலை, ஊடகவியலாளர்கள் கொலை, கடத்தல், நிதி மோசடிகள், அரச சொத்து துஸ்பிரயோகம், அவன்ட் கார்ட் மோசடி, சிரிலிய சவிய திட்டத்தில் மோசடி, சுயாதீன தொலைக்காட்சி விளம்பர கட்டணத்தில் இடம்பெற்ற மோசடி, விமானப் படைக்கு சொந்தமான ஹெலிகொப்டர்களில் உள்ளக பயணங்களை மேற்கொண்டதற்காக கட்டணம் செலுத்தாமை, திவிநெகும திட்டத்தில் இடம்பெற்ற மோசடி என மஹிந்த ராஜபக்ஸ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களின் பட்டியலும் விசாரணை நடவடிக்கைகளும் நீண்டு செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான மைத்திரிபால சிறிசேனவை ஓரம் கட்டுவதன் மூலம் தாம் எதிர்நோக்கி வரும் பிரதான சவாலை களைய மஹிந்த முனைப்பு காட்டுகின்றார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தோல்வியை உறுதி செய்ய நடவடிக்கை எடுத்தால் அந்த நன்றி விசுவாசத்தின் அடிப்படையில் ரணில் விக்ரமசிங்க, மஹிந்த தரப்பு குற்றச்சாட்டுக்களை கண்டு கொள்ளாமல் விடுவதற்கான சாத்தியங்கள் அதிகமாக காணப்படுவதனால், மஹிந்த ஜனாதிபதி மைத்திரியை ஓரம் கட்டி, ரணிலின் கரங்களை வலுப்படுத்தும் வியூகத்தை வகுத்துள்ளார்.

Post a Comment