Header Ads



மகிந்த அணியின் 20 பேர், மைத்திரி பக்கம் சாயத் தயார்..?


மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ள சுமார் 20 நாடாளுமன்ற உறுப்பினர், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் பக்கத்துக்கு மாற இருப்பதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியில் இடம்பெற்றுள்ள, சிறிய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களே, மைத்திரிபால சிறிசேன அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவிருப்பதாகவும், அவர்களுக்கு பதவிகளும் வழங்கப்படலாம் என்றும் அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.

கூட்டு எதிர்க்கட்சியில் இடம்பெற்றிருந்த மனுச நாணயக்கார மற்றும் லக்ஸ்மன் செனிவிரத்ன ஆகியோர், கடந்த வாரம், பிரதி அமைச்சர் மற்றும் இராஜாங்க அமைச்சர்களாகப் பதவியேற்றிருந்தனர்.

இவ்வாறு மேலும் பலர் அரசாங்கத்துடன் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, கடந்த வாரம், மூன்று புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் தற்போதைய அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்களின் மொத்த எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது,

இதுகுறித்து விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், மேலும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்படலாம் என்று சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, கூட்டு எதிர்க்கட்சியைச் சேர்ந்த வேறு எவரும் அரசாங்கத்துடன் இணையமாட்டார்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.