Header Ads



சமந்தா பவருக்கு அப்பம் விருந்து - மங்களவின் அழைப்பில் ஹக்கீம் + றிசாத் பங்கேற்பு (படங்கள்)


ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவருக்கு சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர நேற்றிரவு (21) வழங்கிய விருந்துபசாரத்தில் அப்பம் முக்கிய இடத்தை வகித்திருந்தது.

வெளிவிவகார அமைச்சில், சமந்தா பவருக்கு, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் இராப்போசன விருந்து அளிக்கப்பட்டது.

இதில் முக்கியமாக அப்பம் பரிமாறப்பட்டது. இதனை சிறிலங்காவின் ‘அப்பம்’ இராஜதந்திரம் என்று, சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் குறிப்பிட்டுள்ளார்.

சிறிலங்காவின் அப்பம் இராஜதந்திரம், அமெரிக்க இராஜதந்திரிகள் மட்டத்தில் பிரபலமடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு நவம்பர் 21ஆம் நாள் எதிரணியின் பொதுவேட்பாளராக போட்டியிடுவதற்காக மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இருந்து மைத்திரிபால சிறிசேன வெளியேறியிருந்தார்.

அதற்கு முதல் நாள், தன்னுடன் ஒன்றாக இருந்து அப்பம் சாப்பிட்ட மைத்திரிபால சிறிசேன, சொல்லாமல் கொள்ளாமல் எதிரணியின் பக்கம் ஓடி விட்டதாக, தேர்தல் மேடைகளில் மகிந்த ராஜபக்ச கூறிவந்தார்.

அதேவேளை, மைத்திரிபால சிறிசேன அதிபராகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர், முதல் முறையாக கடந்த பெப்ரவரி மாதம் சிறிலங்கா வந்திருந்த தெற்கு மத்திய ஆசியாவுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வாலுக்கும் அப்பம் விருந்து வழங்கப்பட்டது.

தாம் முதல் முறையாக அப்பத்தை சாப்பிட்டதாக குறிப்பிட்டிருந்த அவர், அதனை சிறிலங்காவின் அப்பம் இராஜதந்திரம் என்று விபரித்திருந்தார்.

இந்த நிலையில், சிறிலங்கா வந்துள்ள சமந்தா பவருக்கும், அப்பம் விருந்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த விருந்துபசாரத்தில், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விருந்துபசாரத்தின் போது, அமைச்சர்கள், ரவூப் ஹக்கீம் மற்றும், ரிசாத் பதியுதீன் ஆகியோர் சமந்தா பவருடன் பேச்சுக்களை நடத்தியதாகவும், அதுல் கெசாப் தெரிவித்துள்ளார்.



No comments

Powered by Blogger.