2020ம் ஆண்டு வரையில், அரசாங்கத்தை அசைக்க முடியாது - மைத்திரியின் உறுதியான நம்பிக்கை
எதிர்வரும் 2020ம் ஆண்டு வரையில் அரசாங்கத்தை அசைக்க முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாளைய அரசியல் நிகழ்ச்சி நிரல் எதுவும் கிடையாது. நாட்டின் எதிர்காலம் பற்றிய நிகழ்ச்சி நிரலே முன்னெடுக்கப்படுகின்றது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும்.
ஜனாதிபதி செயலகத்தின் மாதாந்த செலவை 100 மில்லியனினால் குறைத்தேன்.
பணியாளர்களின் எண்ணிக்கையை 1600 லிருந்து 600 ஆக வரையறுக்கப்பட்டது.
வாகனங்களின் எண்ணிக்கை 75 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
சுயாதீன தொலைக்காட்சியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று நேற்று இதனைத் தெரிவித்துள்ளார்.
தமது சகோதரரின் சம்பளத்தை உயர்த்திக் கொண்டுள்ளதாக வெளியாகும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
டெலிகொம் நிறுவனத்தின் தலைவரான தமது சகோதரர் சம்பளத்தை உயர்த்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எனினும் கடந்த ஜனவரி மாதம் இதற்கு முன்னர் பதவி வகித்த நிறுவனத்தின் தலைவர் பெற்றுக்கொண்ட சம்பளத்தையே எனது சகோதரரும் பெற்றுக்கொள்கின்றார்.
பணிப்பாளர் சபை மாற்றத்தின் ஊடாக சம்பளம் உயர்த்திக் கொண்டதாக சிலர் செய்து வரும் பிரச்சாரங்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
நவம்பர் டிசம்பர் மாதத்தில் நிலவி வரும் மழை காரணமாக நாட்டில் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளதாகவும் இது சாதாரண நிலைமையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி மாதமளவில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையும் எனவும் ஜனாதிபதி நேற்று நடைபெற்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று தெரிவித்துள்ளார்.

Post a Comment