"கிழக்கு முஸ்லிம் மண்ணை, அடகுவைத்து ஏலம் போடுதல்"
(எம்.எம்.ஜபீர்)
இலங்கையில் 20 இலட்சம் முஸ்லிம்கள் வாழுகின்றார்கள். இவர்களுள் மூன்றில் ஒரு பகுதியினர் கிழக்கிலும் மூன்றில் இரண்டு பகுதியினர் கிழக்கிற்கு வெளியிலும் வாழுகின்றார்கள். முஸ்லிம் கட்சி அரசியலை பொறுத்தவரை கிழக்கிற்கு வெளியில் வாழுகின்ற மூன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்களில் ஒருசிறிய பகுதியினரைத்தவிர பெரும்பான்மையானவர்கள் அதனை அங்கீகரிக்கவில்லை. அவர்கள் தேசிய அரசியலில் ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சார்ந்தவர்களாகவே இருக்கின்றார்கள் என்று சம்மாந்துறையை சேர்ந்த கல்வியலாளர் ஏ.ஆதம்பாவா வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது இந்த விடயம் தொடர்பாக மறுவார்த்தையில் கூறுவதானால் முஸ்லிம் கட்சி அரசியல் கிழக்கில் தான் உயிர்வாழுகின்றது. கிழக்கில் இருந்து உதித்த தலைமைதான் முஸ்லிம்கட்சி அரசியலை நாட்டிற்கு அறிமுகப்படுத்திக்காட்டியது.
அத்தலைமை மறைந்த போதும் முஸ்லிம் கட்சி அரசியலின் முக்கியத்துவம் கிழக்கில் மறைந்து விடவில்லை. கிழக்கைப் பொறுத்தவரை எங்கிருந்து தலைமைத்துவம் வருவது என்பதை ஒருபொருட்டாக கருதுவதில்லை. காரணம் தலைமைத்துவம் எங்கிருந்து வருகின்றது என்பதைவிட தனித்துவ அரசியல் அல்லது முஸ்லிம் கட்சி அரசியலை தக்கவைப்பதே முக்கியமானது என கருதுகின்றமையாகும். ஆனால் கிழக்கு மக்களின் உணர்வு பூர்வமான இந்த சமூக சிந்தனையை கிழக்கிற்கு வெளியே உள்ள முஸ்லிம்கட்சி தலைவர்கள் தங்களது அரசியல் சுயலாபத்திற்காக பயன்படுத்தி வருவதும், தனித்துவ அரசியலில் இருக்கின்ற பற்றின் காரணமாக கிழக்கு மக்கள் இதனை இன்னும் கண்டு கொள்ளாமல் இருப்பதும்தான் துரதிஷ்டவசமாகும்.
கண்டித் தலைமைத்துவமும் வன்னித் தலைமைத்துவமும் கிழக்கு மக்களின் வாக்குப்பலத்தின் காரணமாக கெபினற் அமைச்சுப் பதவிகளை கபளீகரம் செய்வதனால் கிழக்கு மக்களுக்கு கிடைக்க வேண்டிய அவ்வமைச்சுப் பதவி இல்லாமல் செய்யப்படுகின்றது. இந்நிலைமை ஏற்படுவதற்கு காரணம் தனக்கு ஏதாவது கிடைத்தால் போதும் என நினைக்கின்ற கிழக்கிலுள்ள சில சுயநல அரசியல்வாதிகளும் நிச்சயமாக காரணமாய் அமைந்துள்ளார்கள். இதுதான் இன்றைய கிழக்கின் அவலநிலை. வாக்களித்து விட்டு அடுத்த தேர்தல் வரை ஒருத்தரை ஒருத்தர் விமர்சனம் செய்து கொண்டே இருப்பார்கள். எமதூரில் பாதைகள் போடவில்லை. பாடசாலையில் கட்டிடமில்லை. கற்பிக்க ஆசிரியர்கள் இல்லை. படித்த மகனுக்கு உத்தியோகமில்லை. ஊருக்கு எந்த அபிவிருத்தியுமில்லை. இப்படி ஒவ்வொரு குறையாகச் சொல்லி புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அடுத்த தேர்தல் வந்தால் எல்லாவற்றையும் மறந்து வாக்களிப்பார்கள். இத்தனைக்கும் கிழக்கில் தான் தெருவுக்குத்தெரு டாக்டர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், பட்டதாரிகள், கலாநிதிகள் என்று இடரினாலும் ஒரு கற்றவனில் தான் முட்டவேண்டியிருக்கும் எனும் அளவுக்கு கற்றவர்களைக் கொண்ட கிழக்கு தனக்கென்று ஒருதலைமையை உருவாக்க வழியில்லாமல் இறக்குமதியாகும் வியாபாரத் தலைமைகளை நம்பியிருக்கின்ற அவல நிலையே கடந்த 15 வருட காலமாக கிழக்கில் காணக்கூடியதாகவுள்ளது. அவ்வாறான இறக்குமதித் தலைமைகளுக்கு கிழக்கைப் பற்றிய கவலைகள் இல்லவே இல்லை. அதனால் தான் கிழக்கு இன்னும் அபிவிருத்தி அடையாமல் அப்படியே இருக்கின்றது.
கற்றவர்கள் நிரம்பி வழியும் கிழக்கு இந்த இறக்குமதித் தலைமைகளை சரியாகப் புரிந்து கொள்ளாவிட்டாலும், அத்தலைமைகள் கிழக்கை சரியாகப் புரிந்து வைத்திருக்கின்றார்கள். ஆற்றல், பேச்சுத்திறமை உள்ளவர்கள், சமூகத்திற்காக நேர்மையாக சிந்தித்து நெஞ்சுரத்தோடு பேசக்கூடியவர்கள் கிழக்கிலிருந்து உருவாகி விடக்கூடாது. அவ்வாறானவர்கள் பாராளுமன்றம் சென்று விடக்கூடாது. அவ்வாறு சென்றால் அதனை செய்யாது மக்களை நம்பவைத்து, ஏமாற்றி பிழைப்பு நடாத்தும் தங்களின் வேசம் கலைந்து அரசியல் பிளைப்பு கெட்டுவிடும் என்பதில் அவர்கள் தெளிவாக இருக்கின்றார்கள்.
19ஆவது, 20ஆவது திருத்தச் சட்ட வரைபில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக வை.எல்.எஸ் ஹமீட் அவர்களையும் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக நிசாம் காரியப்பர் அவர்களையுமே அவ்விரு கடசித் தலைமைத்துவங்களும் நியமித்து அவற்றில் திருத்தங்களை கொண்டுவர வழிசமைத்தது. அதிலும் வை.எல்.எஸ் ஹமீட் அவர்களின் பங்களிப்பு அளப்பெரியது என நாம் அறிவோம். சமூக உரிமையை பாதுகாக்கும் திருத்தச் சட்ட வரைபில் இவ்விருவரையும் அக்கட்சிகள் நியமித்து போராடியமையானது அவ்விருவருமே அவர்களிடத்திலிருந்த அறிவாளிகளும் திறமைசாலிகளும் என அவர்களே வழங்கிய சான்றிதழ் என்பதற்கு இதனைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்? குறிப்பாக இனப்பிரச்சினைக்கான தீர்வும், 20ஆவது திருத்தச் சட்டமும் மேலும் பல சமூகங்களின் உரிமைகள் சம்பந்தப்பட்ட சட்ட மூலங்களும் இந்த பாராளுமன்றத்திலே இயற்றப்பட இருக்கின்ற வேளையிலே இவ்விருவரையும் தேசியப்பட்டியல் தருவதாக கூறி களட்டி விட்டதன் மர்மம்தான் என்னவென்று சமூக சிந்தனையோடு உள்ள அனைவரும் தார்மீக உரிமையோடு கேட்கின்ற கேள்வியாகும்.
அதிலும் குறிப்பாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாட் பதியுதீன் அவர்கள் வை.எல்.எஸ் ஹமீட் அவர்களை தேசியப் பட்டியல் ஒன்று கிடைத்தாலும் அதனை அவருக்கே தருவதாக உறுதிப்பட கூறி பல தடவை தேர்தலில் போட்டியிட ஹமீட் அவர்கள் கேட்ட போதிலும் அதனைத் தடுத்து ஈற்றில் காலை வாரியதை மனச்சாட்சியுடன் உற்று நோக்கி சிந்திக்கும் எவருக்கும் இவரை பாராளுமன்றம் செல்லவிடாது தடுக்கும் எண்ணம் தலைவருக்கு ஏலவே இருந்திருக்க வேண்டும் என்பது இலகுவாகப் புரியும் விடயமாகவே உள்ளது. இங்கேதான் இத்தலைவர்கள் சமூக நோக்கம் கொண்டவர்களா? சுயநல நோக்கம் கொண்டவர்களா? எனவும், கிழக்கில் ஆழுமையுள்ள திறமைசாலிகளையும் சமூகவாதிகளையும் ஓரங்கட்டி சொல்வதைச் செய்யும் கூஜாத்தூக்கி போன்றவர்களை பாராளுமன்றம் அழைத்துச் செல்வதன் உள்நோக்கத்தையும் சிந்திக்க வேண்டியுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு கல்விமான்களை உள்வாங்கி பாராளுமன்றத்திலும் மாகாண சபையிலும் அமரவைத்து அறிவுசார் வழியில் வெற்றிக்காக போராடிக்கொண்டிருக்கும் போது எமது சமூகத்திற்கும் முன்னொரு போதும் இல்லாதவாறு அறிவுக் கூர்மையான இராஜதந்திர அரசியல் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய தேவையின் உச்ச நிலையில் நாம் இருந்து கொண்டிருக்கயில் எமது தலைமைகள் மட்டும் அதற்கு பொருத்தமான தகைமையும் அனுபவமுடைய அரசியல் வாதிகளை பாராளுமன்றம் செல்லவிடாது தடுப்பது கற்றவர்கள் மத்தியில் எமது தலைமைகள் மீது பாரிய சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியிருக்கின்றது. இவர்களின் இந்த மனோ நிலையானது கிழக்கில் உயர் தகுதியுடையவர்கள் அரசியலின் உச்ச பதவிக்கு செல்வதை இரு நோக்கங்களுக்காக திட்டமிட்டு தடுக்கின்றார்கள் என்பதனை உறுதி செய்கின்றது. ஒன்று தங்களின் தலைமைத்துவம் பறிபோய் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் உயர் அமைச்சுப்பதவிகளும் அதன் நன்மைகளும் பறிபோகுமென்பதும், மற்றையது இணக்க அரசியல், விட்டுக்கொடுப்பு எனும் பெயரில் கிழக்கு மக்களின் உரிமைகளை தாரை வார்த்துக் கொடுத்து அதற்கான சன்மானத்தை தாம் சுருட்டிக் கொள்ள முனையலாமென்பதுமாகும். ஆக மொத்தத்தில் கண்டி, வன்னித் தலைமைத்துவ சுய தேவைக்காகவும் நன்மைக்காகவும் கிழக்கு மக்களின் உரிமையும் நலனும் அடகு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற அரசியலே இன்று நடைமுறையிலுள்ளது என்றால் அது மிகையாகாது.
எனவே கிழக்கிற்கு வெளியிலுள்ள இரு தனிநபர்களின் சுயலாபத்திற்காக கிழக்கு முஸ்லிம் மண்ணை அடகு வைத்து எமது உரிமைகளையும் கிடைக்க வேண்டிய நன்மைகளையும் திரைமறைவில் ஏலம் போடும் இத்தகையவர்களின் அரசியலை இனிமேல் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கிழக்கில் தலைமைத்துவம் உருவாவதை உறுதிப்படுத்துவதற்கான கூட்டு முயற்சிகளும் பிரச்சாரங்களும் குறிப்பாக முஸ்லிம்கள் பெரும்பாண்மையாக வாழும் அம்பாறை மாவட்டத்திலிருந்து தலைமைத்துவம் தோன்ற தொடர் முயற்சிகள் மேற்கொள்ளவும் இது சம்பந்தமாக வை.எல்.எஸ்.ஹமீட், நிசாம் காரியப்பர் போன்றோருக்கு அழுத்தம் கொடுக்கவும் கற்றவர்களும் சமூக சிந்தனையாளர்களும் தீர்மானித்துள்ளார்கள். கிழக்கு முஸ்லிம்களின் அரசியல் வெற்றியும் விடிவுகாலமும் தகுதியானதும் நேர்மையானதுமான தலைமைத்துவம் கிழக்கு மண்ணில் உதயமாவதிலேயே தங்கியுள்ளது. அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது. கிழக்கிற்கோர் கிழக்கு மண்வாசனை அச்சாணி நிச்சயம் தேவை. என்றும் ஆதம்பாவா தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளார்.

Post a Comment