Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு பாகிஸ்தானில் இராணுவ மரியாதை, 6 ஒப்பந்தங்களும் கைச்சாத்து (படங்கள் இணைப்பு)


பாகிஸ்தான் பிரதமர் மாளிகையில் இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களுக்கு இராணுவ மரியாதையுடனான உத்தியோகபூர்வ வரவேற்பு வைபவம் வழங்கப்பட்டத. இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு பாகிஸ்தானுக்கு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (06) அந்நாட்டு பிரதமர் நவாஷ் ஷெரிப்பை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையில் 6 ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டதாக பாகிஸ்தான் சென்றுள்ள எமது அலுவலக செய்தியாளர் ரினாஸ் மொஹம்மட் தெரிவித்தார்.

பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளை வலுப்படுத்த கூடிய ஜனாதிபதியின் இந்த விஜயத்திற்காக பாகிஸ்தான் அரசாங்கம் இஸ்லாமாபாத் நகரில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகத்தில் உத்தியோகப்பூர்வ நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

பாகிஸ்தானின் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையின் பின்னர் அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன ஆகியோர் இரு நாட்டு பிரதிநிதிகளை அறிமுகம் செய்தனர்.

இதன் பின்னரே இரு நாட்டு தலைவர்களுக்கு இடையிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இரு நாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன் போது அவதானம் செலுத்தப்பட்டதாக அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் 4 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் 2 ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட்டன.

இரு நாடுகளுக்கு இடையில் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலை தடுப்பதற்கான ஒத்துழைப்பு ஒப்பந்தமும் அவற்றுள் உள்ளடங்குகின்றது.

அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் மற்றும் விளையாட்டு ,அனர்த்தம் மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளின் மேம்பாட்டிற்கான 3 ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இருநாடுகளுக்கு இடையிலான சர்வதேச தொடர்புகள் மற்றும் மூலோபாய ஆய்வு தொடர்பிலான ஒத்துழைப்பு ஒப்பந்தத்திலும் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக, அங்கிருக்கும் எமது அலுவலக செய்தியாளர் தெரிவித்தார்.

இதே வேளை , பாகிஸ்தான் பிரதமர் மற்றும் அந்நாட்டு தேசிய பாதுகாப்பு மற்றும் சர்வதேச தொடர்புகள் தொடர்பிலான ஆலோசகர் ஷர்டாஜ் அஸிஸ் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு இடையிலான சந்திப்பும் இன்று (06) இடம்பெற்றது.




No comments

Powered by Blogger.