'கிழக்கு மாகாணத்திற்கு, முஸ்லிம் முதலமைச்சரே வேண்டும்' ஜெமீல்
இலங்கையின் கிழக்கு மாகாண சபையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் முதலமைச்சராக தொடர்ந்தும் முஸ்லிம் சமூகத்தவர் ஒருவரே இருக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினர் கோரியுள்ளனர்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த விடயத்தில் விட்டுக் கொடுப்புடன் நடந்து கொள்ள முன்வர வேண்டும் என்று அக்கட்சியின் கிழக்கு மாகாண சபை குழுத் தலைவரான ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.
வடக்கு மாகாண சபையில் முதலமைச்சராக தமிழர் ஒருவர் பதவி வகிப்பது போல் கிழக்கு மாகாணசபையில் முஸ்லிம் ஒருவர் முதலமைச்சராக பதவி வகிக்க வேண்டும் என்ற முஸ்லிம்களின் எதிர்பார்ப்புக்கு மாறாக தங்களால் நடந்துகொள்ள முடியாது என்றும் அவர் தெரிவிக்கின்றார்.
கிழக்கு மாகாணசபையின் பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் (11 உறுப்பினர்கள்) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (8 உறுப்பினர்கள்) மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் (4 உறுப்பினர்கள்) இடையில் ஆட்சி மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் தற்போது நடைபெற்று வருகின்றன.
கூடுதலான உறுப்பினர்களை கொண்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே முதலமைச்சர் பதவியை வழங்க வேண்டும் என்பதே ஜனநாயக மரபு என தமிழர் தரப்பு கருதுகின்றது.
இது ஜனநாய மரபாக இருந்தாலும், இந்த விடயத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கொண்டு தீர்மானம் எடுக்க முடியாது என்று ஏ. எம். ஜெமீல் கூறுகின்றார்.
தற்போதைய முதலமைச்சர் நஜீப் ஏ மஜித் உள்ளிட்ட மாகாண சபையில் அங்கம் வகிக்கும் ஏனைய கட்சிகளைச் சேர்ந்த முஸ்லிம் உறுப்பினர்களின் ஆதரவு தங்களுக்கு கிடைத்துள்ளதால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட கூடுதல் உறுப்பினர்களின் ஆதரவை தங்களால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் இடையில் ஆட்சி மாற்றம் தொடர்பான பேச்சுக்கள் நடைபெற்றுள்ளன.தொடர்ந்தும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த பேச்சுவார்தைகளின் முடிவில் நல்ல முடிவொன்று கிடைக்கும் என்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ. எம். ஜெமீல் வெளியிட்டார்.
இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அதிகாரபூர்வமான கருத்துக்கள் கிடைக்கப்பெறவில்லை.
2012-ம் ஆண்டு தேர்தல் முடிவுகளின் படி, கிழக்கு மாகாணசபையின் 37 உறுப்பினர்களில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் 15 பேர் தெரிவாகியிருந்தனர்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் மற்றும் தேசிய காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கியிருந்த அந்தக் கூட்டணி, முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவைப் பெற்று 22 உறுப்பினர்களுடன் ஆட்சியை அமைத்துக் கொண்டது.
தற்போதைய நிலையில் முஸ்லிம் காங்கிரஸ் (8 உறுப்பினர்கள்) அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (இருவர்) உட்பட 11 பேர் ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கின்ற நிலையில் கிழக்கு மாகாண சபையில் இந்த ஆட்சி மாற்றம் ஏற்படவுள்ளது.
bbc
.jpg)
பாராளு மன்றத்தில் 18வது திருத்தச் சட்டம். கிழக்கு மாகான சபையில் திவின கும சட்டம்.... இது தான் முஸ்லிம் காங்கிரஸ். நிட்சயமாக முஸ்லிம் காங்கிரசுக்குள் மாற்றம் தேவை. முஸ்லிம்களின் அரசியல் பயணத்தில் மாற்றம் தேவை. முஸ்லிம்களும் குறிப்பாக முஸ்லிம் இளைஞ்சர்களும் மாற்றத்துக்கு முயற்சிப்பார்களா?
ReplyDelete