Header Ads



தமிழ் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்று கொடுப்பதன் மூலமே, தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு அர்த்தம் கிடைக்கும்

சிங்கள பெளத்த உரிமைகளை பாதுகாத்து நாட்டை பாதுகாக்க விரும்பி மாற்றத்தினை மக்கள் ஏற்படுத்தியதைப்போல் தமிழ் முஸ்லிம் சமூகத்தினரின் உரிமைகளை வென்று கொடுப்பதன் மூலமே தற்போது ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு உண்மையான அர்த்தம் கிடைக்கும் என தெரிவித்த சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள மாற்றமானது மக்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைய வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

கால மாற்றத்திற்கேற்ப இளைஞர்களின் சக்தியினூடாக ஒரே கூரையின் கீழ் இணைவோம் எனும் தொனிப்பொருளில் நேற்று இளைஞர் இயக்கத்தினால் கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாநாட்டில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

எனது அரசியல் வாழ்க்கையில் போராட்டங்களும் மாற்றத்திற்குமே அதிக நேரம் செலவழித்துள்ளேன். கடந்த காலங்களில் பல தலைவர்களுடன் செயற்பட்டிருக்கின்றேன். அதேபோல் இடைப்பட்ட காலங்களில் யுத்தத்திற்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. இவை அனைத்தையும் கடந்து தற்போது மிகப்பெரிய மாற்றம் ஒன்றினை ஏற்படுத்தியுள்ளோம். இந்த மாற்றம் சரியாக அமைய வேண்டுமாயின் தேசிய அரசாங்கத்தின் நூறு நாட்கள் வேலைத்திட்டம் சரியாக செயற்பட வேண்டும்.

அதேபோல் ஆட்சி மாற்றம் ஏற்படுவதனால் மக்கள் திருப்தியடையப்போவதில்லை. மக்களின் பசியை போக்கி அனைத்து மக்களும் சந்தோஷமாக வாழக்கூடிய வகையில் ஆட்சியில் பொருளாதார மாற்றத்தினை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதேபோல் இன மத ஒற்றுமையினை பாதுகாத்து ஒன்றிணைந்த ஆட்சியினை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் சிங்கள பெளத்த உரிமைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அவசியமானது. ஆனால் அதற்கு சமமான வகையில் தமிழ் முஸ்லிம் கிறிஸ்தவ மக்களின் உரிமைகளுக்கும் முன்னுரிமை வழங்கி செயற்பட வேண்டிய தேவை உள்ளது. அத்தோடு நாட்டின் அபிவிருத்தி மேம்பட வேண்டும் நல்ல வர்த்தக பொருளாதார அபிவிருத்தி அடைந்த நாடுகளுடன் மேற்கொள்ளப்பட வேண்டும். எனவே இப்போது ஏற்பட்டுள்ள மாற்றத்தினை சரியான முறையில் செயற்திறன் மிக்கதாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

அத்தோடு கட்சி அரசியல் முறைமையில் இருந்து விடுபட்டு மாறுபட்ட அரசியல் முறைமையொன்றினை உருவாக்க வேண்டும். சின்னம் வர்ணம் கொள்கையென தனித்து பயணித்து நாட்டின் அபிவிருத்தியினை கட்டிக் காக்க முடியாது. எனவே இப்போது அனைவருக்கும் மிகச்சிறந்ததொரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இதனை மிகச்சரியாக பயன்படுத்தி மாற்றத்தினை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்.

மேலும் எந்தவொரு மாற்றத்திற்கும் அடிப்படை இளைஞர்களே. இளைஞர் சமூகம் ஒன்றிணைவதுதான் ஒரு நாட்டின் பிரதான மாற்றத்திற்கு அடிப்படையாக அமையும். 

3 comments:

  1. இலங்கையில் ஒரு சிங்கள பௌத்த அரசியல்வாதியின் வாயிலிருந்து இவ்வாறான ஒரு விடயம் வெளிவருவது என்பது அதிசயமானது. இது உண்மையில் உள்ளத்திலிருந்தும் வருமாயின் நல்லாட்சிக்கான அறிகுறிகள் ஆரம்பமாகிவிட்டன என்றுதான் கருதவேண்டும்.

    திரு. ராஜித சேனரத்ன பெரும்பாலும் நியாயத்தின் பக்கமே நின்று வரும் ஒரு அரசியல்வாதி. அவரது பக்கபலம் புதிய ஜனாதிபதிக்கு வரப்பிரசாதம்.

    எது எவ்வாறாயினும் முன்னைய செஞ்சால்வை நாயகர் போல கொச்சைத் தமிழில் சமத்துவம் பேசி சிறுபான்மை மக்களின் ஆலயங்களுக்கே வேட்டுவைத்த போக்குகள் இன்மேல் ஏற்படாது என்றே நம்புவோம்!

    ReplyDelete
  2. வேருவளை சம்பவத்தின் போதும் ராஜித அவர்கள் உணர்வு பூர்வமான எதிர்ப்பை வெளியிட்டும் சேனாவை கடுமையாக சாடியதும் பின்னர் சேனா இவரை ஊடக சந்திப்பில் ஏசியதும் எனக்கு ஞாபகம் உண்டு

    ReplyDelete
  3. ஆடம் இஸ்ஸத்,

    நீங்கள் கூறுவது சரியானது. அதுமட்டுமல்ல, "பொதுபலசேனவின் கூற்றுகளுக்கு பதிலளிக்க முயல வேண்டாம்" என்று முன்னைய ஜனாதிபதி மகிந்தர், ராஜித அவர்களிடம் அப்போது கேட்டுக்கொண்டதும் எனக்கு நினைவிருக்கின்றது.

    ஆனால், திரு. ராஜித அவர்கள் அப்படி இருக்காமல் பொதுபலசேனவின் கருத்துகளுக்கு துணிந்து சாட்டையடி கொடுத்தவாறுதான் இருந்தார்.

    ஒன்றை அறிவீர்களா நண்பரே?

    இந்த உலகில் அநியாயம் கண்டு அதற்கெதிராக துணிந்து எழுந்தவர்கள் மட்டும்தான் புதிய சரித்திரம் படைத்திருக்கின்றார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.