மத்திய மாகாண சபையின் முதலமைச்சராக, திலின பண்டாரவை நியமிக்க 34 பேர் ஆதரவு
மத்திய மாகாண சபையின் முதலமைச்சர் பதவிக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர் திலின பண்டார தென்னக்கோன் நியமிக்கப்பட வேண்டுமென மாகாண சபையின் 34 உறுப்பினர்கள் ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சத்தியக் கடதாசிகள் மூலம் மாகாண உறுப்பினர்கள் தம்மிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.
மத்திய மாகாண சபையின் 32 உறுப்பினர்கள் இன்று முற்பகல் தனது அலுவலகத்திற்கு வந்து தன்னிடம் இந்த விடயத்தை உறுதிசெய்ததாகவும் ஆளுநர் கூறினார்.
தற்போதைய முதலமைச்சரான சரத் ஏக்கநாயக்க பிரதிநிதித்துவம் வகிக்கின்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பையே, திலின பண்டார தென்னக்கோன் பிரதிநிதித்துவப் படுத்துவதன் காரணமாக, இந்த விடயம் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளதாக ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ குறிப்பிட்டார்.
இதற்கமைய, அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவிடம் ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதாகவும் ஆளுநர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், இந்த விவகாரம் தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனைகளையும் தாம் பெற்றுக்கொள்ளவுள்ளதாக ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ மேலும் தெரிவித்தார்.

Post a Comment