Header Ads



தலையில்லா முண்டங்கள்..!


-கவிஞர் பொத்துவில் அஸ்மின்-

தலையெழுத்தை தலைகீழாய் எழுதிவைத்த ஆண்டவனே
தந்துவிடு நல்வாழ்வை எமக்கு!-தங்கத்
தலைவரினை இழந்துவிட்டு தவிக்கின்ற எம்சமூகம்
தலையிழந்து முண்டமெனக் கிடக்கு!

தலைவர்நாம் என்றவர்கள் தறுதலைகள் முன்னாலே
தலைகவிழ்ந்து நிற்கின்றார் எதற்கு-?அவர்
தலையாட்டி பொம்மைகள்போல் தனித்துவத்தை விட்டுவிடின்
தருவாரே சிலஎலும்பு அதற்கு!

தலையில்லாத் தலைகளினை தலைவரென நினைத்ததற்காய்
தலையிடிதான் எங்களுக்குப் பரிசு!-பதவிக்காய்
தலைசொறிந்து பல்லிளிக்கும் தலைவர்களால்
தடுமாறும் எம்வாழ்க்கை தரிசு!

தலைதடவி கண்களிலே கண்கெட்டோர் கைவைக்க
தலையணையில் எம்தலைகள் இருக்கு!-தங்கள்
தலைதப்பி னால்போதும் என்கின்ற கோழையரை
தேர்ந்தெடுத்த நாங்கள்தான் கிறுக்கு!

தலைப்பிறையை மேகத்தால் தகர்த்தெறிய முடியாது
தலைவர்களே கொண்டிடுவீர் ஒப்பு!-உங்கள்
தலைகளினை காப்பாற்ற கண்ணிருந்தும் குருடர்களாய்
தவறுகளை பார்த்திருத்தல் தப்பு!

தலையில்லா முண்டங்களாய் மாறிவிட்ட எம்மவர்க்கு
தலையாக ஒருதலைவன் எழுவான்!-அவன்
தலைவரவர் சுவடுகளில் தயங்காமல் நிதம்நடக்க
தளையொடிந்து சிரிக்குமெங்கள் எழுவான்!!

3 comments:

  1. பௌத்தரான (புத்த பிக்குவான) ரதன தேரர் சம்பிக்கபோன்றோர்அரசாங்கத்தின் நல்ல அமைச்சு பதவியை தூக்கி வீசிவிட்டு நெஞ்சை நிமிர்த்தி மஹிந்தவை எதிர்கின்றே தைரியத்தை பார்க்க ஆர்ச்சரியமாக இருக்கிது, அதே நேரம் எங்ககள் கலிமா சொன்ன முஸ்லிம் அமைச்சர்களை பார்த்தல் ச்சீ .....
    போதாது என்று மஹிந்தேகி பொனாடை, வாழ்த்துகளும்,நட்சரிதலும்.... சுபனல்லாஹ்

    ReplyDelete
  2. We have leadership....But we are not used....Why were try with NFGG.

    ReplyDelete

Powered by Blogger.