Header Ads



ஏர்ஏசியா விமானம் கண்டுபிடிப்பு - உடல்கள் கடலில் மிதப்பதாக தகவல்..!

இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டு, மாயமான ஏர் ஏசியா கியூஸ் 8501விமானம் 62 மணி நேரத்திற்கு பின்னர் ஜாவா கடலில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விமானத்தை தேடும் பணியில் ஈடுபட்டுள்ள மீட்பு படையினர் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்திற்கு உயர் அதிகாரிகள் விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவல் அறிந்து சுர்பையா விமான நிலையத்தில் உறவினர்கள் பலர் கதறி அழுதபடி நிற்கின்றனர். 95 சதவீதம் இது மாயமான விமானத்தின் பாகங்களே என்றும் கூறப்படுகிறது. 

கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்ட ஏர் ஏசியா கியூஸ் 8501 ( மலேசியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது ) சுர்பயா விமான நிலையத்தில் இருந்து ஞாயிறு காலை புறப்பட்ட சில நிமிடங்களில் விமானம் மாற்று பாதையில் திரும்பியது. காலை 7.42 க்கு தொடர்ந்து தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த விமானத்தில் 149 இந்தோனேஷியர்கள், 3 கொரியர்கள், 1 சிங்கப்பூரியன், 1 பிரிட்டன் , 1 மலேசியன், 7 விமான ஊழியர்கள் இருந்தனர். 

இந்த விமானத்தை தேடும் பணியில் கப்பல்கள், விமானங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இந்நிலையில் ஜாவா கடல் பகுதியில் கலிமன்டன் என்ற தீவு அருகே விமான பாகம், உடல்கள் கடலில் இருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து மீட்பு படையினர் அங்கு விரைந்துள்ளனர். 

இது குறித்து இந்தோனேஷிய விமானப்படை அதிகாரி அகஸ் திவி கூறுகையில், 'கடலில் நாங்கள் ஆய்வு செய்தபோது, கடல் மேற்பரப்பில் 10க்கும் மேற்பட்ட பொருட்கள் தென்பட்டன. பல பாகங்கள் வெள்ளை நிறத்தில் உள்ளன. விமானம் ரேடார் திரையில் இருந்து விலகிய இடத்திற்கு அருகில் இந்த பொருட்கள் தென்பட்டுள்ளன,' என்றார்.



No comments

Powered by Blogger.