Header Ads



நடுவானில் கியர் பழுது, 447 பயணிகள் உயிர் பயத்தில் கதற, சாமர்த்தியமாக தரையிறக்கிய ஹீரோ

விமானப் பயணிகளுக்கு இந்த ஆண்டு மிகவும் மோசமான ஆண்டாகவே அமைந்திருக்கிறது. அடுத்தடுத்து விமானங்கள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி வருகிறது. 

இந்த பரபரப்பும் பதட்டமும் ஒருபுறமிருக்க.. லண்டனின் கட்விக் விமான நிலையத்திலிருந்து 447 பயணிகள் மற்றும் 15 விமானப் பணியாளர்களுடன் லாஸ் வேகாஸ் நகருக்குப் புறப்பட்ட போயிங் 747 ரகத்தைச் சேர்ந்த ஜம்போ விஎஸ்43 விமானம் அதிர்ஷடவசமாக விபத்தில் இருந்து தப்பியது. 

விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனத்தைச் சேர்ந்த இந்த விமானம் உள்ளூர் நேரப்படி இன்று காலை 11.44 மணிக்கு புறப்பட்டது. மேலெழும்பி பறக்கத் தொடங்கியபோது, சரியாக 12.15 மணிக்கு அதன் லேண்டிங் கியர் பழுதானது விமானிக்கு தெரியவந்தது. உடனடியாக விமான கட்டுப்பாடு அறைக்கு தகவல் அளித்தார். 1.45 மணிக்கு விமானத்தின் லேண்டிங் கியர் பழுதடைந்ததை பயணிகளுக்கு அறிவித்து டெக்ஸ்ட் புக் லேண்டிங் எனப்படும் அவசர லேண்டிங் செய்ய இருப்பதாகவும் விளக்கமாக எடுத்துக் கூறினார். 

இருந்தும் பயணிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். சிலர் தாம் இறந்து விடுவோம் என்ற பயத்தில் கதறி அழுதனர். தான் எடுக்கப்போகும் முடிவிலும் அதை விரைவாக செயல்படுத்துவதிலும் தான் விமானத்தில் உள்ள அனைவரது உயிரும்  உள்ளது என்பதை உணர்ந்த விமானி, முதல் வேலையாக வடக்கு டேவன் கடற்பகுதியைச் சுற்றி வந்து விமானத்தின் எரிபொருளை விரைவாக காலி செய்தார். இதன் மூலம் விமானத்தின் எடை கணிசமான அளவு குறைந்தது. 

பின்னர் தான் கிளம்பிய விமான நிலையத்திற்கு விமானத்தைத் திருப்பியுள்ளார். அங்கும் விமானத்தின் உயரத்தையும் வேகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்த பின்னர் ஓடுதளத்தை நெருங்கியுள்ளார். மொத்தம் உள்ள 4 லேண்டிங் கியர்களில் ஒரு லேண்டிங் கியர் வெளிவராத நிலையில், விமானம் ஓடுதளத்தில் பாய்ந்தது. தரையைத் தொட்டவுடன் விமானத்தில் பலத்த அதிர்வு ஏற்பட்டது. 

இதனால் பயணிகள் உயிர் பயத்தில் அலறினர். இருந்தும் விமானியின் சாமர்த்தியத்தால் சில நிமிடங்களில் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. சரிந்தபடியே பலத்த சத்தத்துடன் உராந்து சென்ற விமானம் சரியாக ஓடுதளத்தில் நின்றது. அடுத்த நொடி பயணிகள் அனைவரும் தங்களை மறந்து கைதட்டினர். உணர்ச்சிப் பெருக்கில் அழுதபடி தங்கள் உயிரைக் காப்பாற்றிய  விமானியைக் கட்டிப்பிடித்துப் பாராட்டினர். அப்போது மணி 3.45. 

தரை இறங்கிய உடன் அங்கு வந்த மீட்புப் படையினர் விமானிகள் மற்றும் பயணிகளை பத்திரமாக வெளியேற்றினர். விமான நிலையத்தை அடைந்த பயணிகள் தங்களின் திகிலான அனுபவங்களை செய்தியாளர்களிடம் பகிர்ந்து கொண்டனர். அதில் காப்மேன் என்ற பயணி, “உலகின் தலைசிறந்த லேண்டிங் இதுதான்” என்றார். 

நெருக்கடியான நேரத்தில் நிதானமாக செயல்பட்டு பயணிகளின் உயிரைக் காப்பாற்றிய விமானிக்கு உலகம் முழுவதிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. ஆனால், அந்த விமானியோ, “பயணிகள் அமைதியாக இருந்து ஒத்துழைப்பு கொடுத்ததால் தான் எங்களால் நிதானமாக செயல்பட முடிந்தது” என்று தன்னடக்கத்துடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.