Header Ads



முஸ்லிம்களை அரவணைத்து செல்லவேண்டிய தேவை எமக்குண்டு - சம்மந்தன்

இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர், பொதுச்செயலாளரை வரவேற்கும் நிகழ்வும் மற்றும் இரா.சம்பந்தன் அவர்களை பாராட்டும் நிகழ்வும் நேற்று அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட தமிழரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் நேற்று மாலை 4.00 மணியளவில் ஆரம்பமான இந்த நிகழ்வில், அக்கரைப்பற்று ஆலையடி வேம்பு பிரதேச சபை வீதியில் இருந்து அதிதிகள் மலர் மாலை அணிவித்து கலாசார மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இந்த நிகழ்வில் கூட்மைப்பின் தலைவர் இரா. சம்மந்தன் உரையாற்றுகையில்,

இலங்கை அரசு தமிழர் பிரச்சினைகளில் இதுவரை காலமும் அக்கறையுடன் நடக்கவில்லை நடந்திருந்தால் நேர்மையாக பக்குவமாக இலங்கைக்குள் தீர்வினை காண்பதற்கு நாங்கள் தயாராக இருந்திருப்போம்.

எமது மக்களின் அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம் போன்ற தேவைகளை நிறைவேற்ற வேண்டிய அதிகாரங்கள் வழங்கப்பட்டிருந்தால் இணங்கி சென்றிருப்போம். ஆனால் அவ்வாறு இல்லை.

நாங்கள் இன்று இக்கட்டான காலகட்டத்தில் நிற்கின்றோம். தமிழ் மக்கள் பிரச்சினை இன்று சர்வதேச மயப்படுத்தப்பட்டுள்ளது.

சர்வதேசம் எமது தமிழ் மக்களுக்கு நிரந்தர தீர்வு ஒன்று கிடைக்க வேண்டும் என்பதிலும், போர் இடம் பெற்ற காலத்தில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இவற்றிக்கு சர்வதேச விசாரணை நடாத்தப்பட வேண்டும் எனவும் என எடுத்துரைத்து.

விசாரணைகள் இன்று நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இதில் சர்வதேசம் கரிசனையாகவும் இருக்கின்றது.

இலங்கை அரசாங்கம் அனைத்தையும் தட்டிக்கழிக்கும் நிலைமாறி பதிலளிக்கக் கூடிய கட்டாய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எமது பிரச்சினையில் நீண்ட காலமாக அக்கறைகாட்டி வந்த இந்திய மத்திய அரசு தற்பொழுது இலங்கைத் தமிழ் மக்களுக்கு தீர்வு வழங்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாகவுள்ளது.

நாங்கள் இதனை கருத்தில் கொண்டு மிகவும் துரிதகதியில் ஒற்றுமையாக செயற்பட வேண்டும். இதற்காக மக்கள் எம்முடன் இணைந்து செல்கின்றனர்.

இந்த பிரச்சினைக்கு ஏதோ ஒரு வகையில் மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யக் கூடிய நிரந்தர தீர்வினை பெறுவதற்காக விரைவாக செயற்பட வேண்டும்.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் அம்பாறை மாவட்டத்தில் தமிழ் மக்களுக்கு கூடுதலான பிரச்சினைகள் இருக்கின்றது. இதனை மறுப்பதற்கில்லை.

அம்பாறையில் 1981 ஆம் ஆண்டு காலப்பகுதியில் காணப்பட்டதை விட சற்று குறைவாகவே தமிழ் மக்களில் விகிதாசாரம் தற்பொழுது இருக்கின்றது.

அந்த வகையில் 1981 ஆம் ஆண்டு முஸ்லிம்கள் 42 விகிதமாகவும், சிங்களவர்கள் 38 விகிதமானவர்களும், தமிழர்கள் 20 வீதமானவர்களும் இருந்தார்கள். ஆனால் தற்பொழுது தமிழர்கள் 18 வீதமாக குறைவடைந்து காணப்படுகின்றனர்.

வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு நிரந்தரமான நடைமுறை படுத்தக் கூடிய தீர்வொன்று எட்ட வேண்டுமாக இருந்தால் இயன்றளவு இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை அரவணைத்து அந்த பாதையில் செல்ல வேண்டிய தேவை எமக்கு உண்டு.

இவற்றுக்காக முஸ்லிம் தலைவர்களுடன் பேசுவோம் நியாயத்தின் நீதியின் அடிப்படையில் பேசுவதற்கு தயாராக இருக்க வேண்டும்.

அம்பாறைத் தொகுதி 1977 ஆண்டு உருவாக்கப்பட்டது. நிரந்தர தீர்வொன்றின் மூலம் இந்த தொகுதி பிரிக்கப்படாமல் இருக்க வேண்டுமானால் நீங்கள் உங்கள் விகிதாசாரத்தினை 33 வீதங்களுக்கு மேல் பெருக்க வேண்டும். அவ்வாறு அதிகரிக்கின்ற பட்சத்தில் இந்த தொகுதியில் உங்கள் ஆதிக்கம் நிலைநாட்டப்படுவதற்கு வாய்ப்புண்டு.

இதனை தவிர அம்பாறை மாவட்ட தமிழ் மக்களின் உரிமையை உறுதி செய்வதற்காக ஒருவரோடு ஒருவர் ஒத்து செல்ல வேண்டும்.

பல நாடுகளிலே ஒரு கொள்கை இருக்கின்றது அதாவது ஒரு பிரதேசத்தில் வாழ்கின்ற மக்களின் அடிப்படையில் இரட்டை பெரும்பான்மை உருவாக்கப்படுவதன் ஊடாகத்தான் இதனை மேற்கொள்ள முடியும்.

இதனை அம்பாறை மாவட்டத்தில் மாத்திரமின்றி வடகிழக்கு பிரதேசங்களில் தமிழ் மக்களை பாதுகாப்பதற்கு பயன்படுத்தப்படுவது ஒரு முறையாக இருக்கும் என நான் நினைக்கின்றேன்.

இதனால் தமிழ் பேசும் முஸ்லிம் மக்களை பாதுகாக்க வேண்டியும் ஏற்படலாம். அம்பாறை மாவட்ட மக்கள் இதில் நீங்கள் கரிசினையாக இருப்பனை நாங்கள் அறிகின்றோம். இவ் விடயம் பற்றி நிபுணர்களுடன் பேசி ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

இன்று சர்வதேச அங்கீகாரத்தினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுள்ளது. தமிழ் மக்கள் பிரச்சினை சம்பந்தமாக தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்தான் போச வேண்டும் என்று சர்வதேசம் கூறுமளவுக்கு எமது மக்களின் ஏகோபித்த பிரதிநிதிகளாக கூட்டமைப்பு உள்ளது என்பதனை நிருபித்துக் காட்டியமைதான்.

இதனால் தான் அந்த அந்தஸ்து இன்று எமக்கு கிடைந்துள்ளது. இதனை தெடர்ந்து எதிர்வருங்காலங்களில் நிரூபித்துக் காட்ட வேண்டும் எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.