Header Ads



இலங்கையில் பாகிஸ்தானியர்களை கைது செய்யும் நடவடிக்கை ஆரம்பம்

-Vi-

அகதிகளுக்கான ஐ.நா.வின் ஆணையகத்தின் ஊடாக  புகலிடம் கோரிய நிலையில் நீர்கொழும்பில் தங்கியுள்ள பாகிஸ்தான் பிரஜைகள் மீண்டும் கைது செய்யப்படுவதாக பாகிஸ்தானியர்கள் தெரிவித்தனர்.

புதன்கிழமை சிலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் மிரிஹானையில் உள்ள முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகிறது. இது வரை 128 பேர் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜுன் மாதம் 9 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டு பூஸாவில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்ட 56 பாகிஸ்தானியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை (2-9-2014) நீர்கொழும்பில் வைத்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர், மீண்டும் புகலிடக்கோரிக்கையாளர்கள் கைது செய்யப்படுவது ஆரம்பமாகியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் தங்கியுள்ள பாகிஸ்தான் புகலிடக் கோரிக்கையாளர்களை, நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு , கொழும்பு மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் கடந்த  திங்கட்கிழமை  நீக்கப்பட்டது.

இலங்கையில் அடைக்கலம் கோரியுள்ள பாகிஸ்தானிய பெண்ணான அனீலா இம்ரான் தாக்கல் செய்திருந்த மனுமீதான வாதப்பிரதிவாதங்கள் நிறைவடைந்த நிலையில், இந்த மனு மீதான தீர்ப்பு வழங்கப்பட்டது.

அகதிகளுக்கான ஐ.நா. வின் ஆணையகத்தின் ஆட்சேபங்களையும் பொருட்படுத்தாது பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் புகலிட கோரிக்கையாளர்கள் மீது அரசாங்கம் கடுமையாக நடந்துகொண்டதாகவும்  பாகிஸ்தானியர்கள் பலரை நாடு கடத்தியதை தொடர்ந்து இவர், அந்த வழக்கை தாக்கல் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.