கண்ணில் தெரியும் புற்றுநோயின் அறிகுறி
புற்றுநோய் என்பது அமைதியாகக் கொல்லும் ஒரு நோய். அழையா விருந்தாளியாக உடலுக்குள் வந்து உட்கார்ந்து கொண்டு, பல வருட ராஜாங்கம் நடத்தி, உடலின் அனேக உறுப்புகளை ஆக்கிரமித்து, அழித்த பிறகுதான் தன் அரக்கத்தனத்தின் அறிகுறிகளைக் காட்டிச் சிரிக்கும். சந்தேகத்தின் பேரில், ஆரம்பக் கட்டத்திலேயே பரிசோதனை செய்து, சிகிச்சைகளை மேற்கொண்டு, தப்பிக்கிறவர்கள் உண்மையில் அதிர்ஷ்டசாலிகளே...
கேன்சரை காட்டிக் கொடுப்பதில் கண்களுக்கு மிகப் பெரிய பங்கு உண்டு என்றால் நம்ப முடிகிறதா?
உடலின் எந்த பாகத்தில் புற்றுநோய் வந்தாலும், அதன் அறிகுறிகள் கண்களில் பிரதிபலிக்குமாம். ஆச்சரியமான, அதிசயமான அந்தத் தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார் கண் சிகிச்சை நிபுணர் பிரவீண் கிருஷ்ணா. ‘‘கண்கள்ல பூச்சி பறக்கிற உணர்வு, தண்ணீர் கசியறது, விழித்திரை பிரச்னை... வயசானவங்களுக்கு வரக்கூடிய இதையெல்லாம் பெரும்பாலும் முதுமையோட அறிகுறிகள்னு அலட்சியப்படுத்தறவங்கதான் அதிகம். வயசானா பார்வை மங்கறதும், பூச்சி பறக்கிறதும் சகஜம்தான்னு விட்ருவாங்க.
ஆனா, அதெல்லாம் அவங்க உடம்புல எங்கயோ புற்றுநோய் தாக்கியிருக்கிறதுக்கான அறிகுறியா இருக்கலாம்னு யாருக்கும் யோசிக்கத் தோணாது.நடுத்தர வயசுக்குப் பிறகு பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயும், ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோயும் தாக்கிற வாய்ப்புகள் அதிகம். திடீர்னு தென்படற கட்டி, எடை குறையறது, கழிவறைப் பழக்கங்கள் மாறிப் போறது, இருமல், ரத்தத்தோட வெளியேறும் சளி... இப்படி புற்றுநோய்க்கான பொதுவான அறிகுறிகளைத் தாண்டி, கண்கள்லயும், அதைக் கண்டுபிடிக்கலாம்.
மனித உடம்புல அதிகப்படியான ஆக்சிஜன் ரெட்டினா-னு சொல்ற விழித்திரைக்குத் தான் போகுது. அந்த ஆக்சிஜன், விழித்திரைக்குப் பின்னாடி உள்ள கோராயிடு-ங்கிற பகுதி மூலமா தான் விழித்திரைக்குப் போகும். உடம்போட ரத்த ஓட்டம், உடல் முழுக்க ஒன்றோடு ஒன்று இணைஞ்சு போகும். அதனால, ரத்தத்துல உள்ள புற்றுநோய் செல்கள், கோராயிடு மூலமா, விழித்திரைக்கும் போகும். விழித்திரைல தண்ணீர் கசிஞ்சு, விழித்திரை முன்னாடி வரும். திடீர் பார்வைக் குறைபாடுதான் இதோட அறிகுறி.
சிலருக்கு non hodgkin's lymphoma-னு சொல்லக் கூடிய ரத்தப் புற்றுநோய் இருக்கும். கண்ல பூச்சி பறக்கிறது, வெளிச்சம் அதிகமா தெரியறதையும் முதுமையோட அறிகுறிகளாகவும், மறதி, நடக்கும் போது ஏற்படற பிரச்னைகளை அல்சீமர் நோயோடவும் தொடர்புப் படுத்திப் பார்த்து, வேற, வேற சிகிச்சைகளை எடுத்திட்டிருப்பாங்க. விழித்திரை நிபுணராலதான் அதை சரியா கண்டுபிடிக்க முடியும். பி ஸ்கேன் மூலமா விழித்திரையைப் பரிசோதிச்சு, கோராயிடுல கட்டி இருக்கா, அது எங்கருந்து வந்ததுங்கிறதையும் கண்டுபிடிப்பாங்க. பிறகு விழித்திரவத்தை எடுத்து சோதனைக்குட்படுத்தி, புற்றுநோய் இருக்காங்கிறதை உறுதி செய்து, அப்படி உறுதியானா, அதுக்கான சிகிச்சைகளை ஆரம்பிக்கணும்’’ என்கிறார் டாக்டர்
பிரவீண்.
.jpg)
Post a Comment