துருக்கியின் ஜனாதிபதி தேர்தலில் எர்டோகன் வெற்றி
துருக்கியில் நேற்று நடைபெற்ற முதல் அதிபர் தேர்தலில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக அங்கு பிரதமர் பொறுப்பில் இருந்த ரெசெப் தையிப் எர்டோகன் போட்டியிட்டார். இதுநாள் வரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வாகவும், மரியாதை நிமித்தமான அலங்கார பதவியாகவும் இருந்த அதிபர் பதவி முதன்முறையாக இந்தமுறை பொதுமக்கள் வாக்கெடுப்பின்மூலம் தேர்வு செய்யப்படுகின்றது.
இதில் பாதி வாக்குகளுக்கு மேல் எண்ணப்பட்ட நிலையில் தனக்கு நெருங்கிய போட்டியாளரைவிட 13 புள்ளிகள் அதிகம் பெற்றும், எண்ணப்பட்ட வாக்குகளில் 52 சதவிகிதத்தினைப் பெற்றவருமான எர்டோகன் வெற்றி பெற்றுள்ளதாக நீதித்துறை அமைச்சர் பெகிர் போஸ்டாக் தனது இணையதள செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
முஸ்தபா கமால் ஆட்டாடுர்க்கால் கடந்த 1923ஆம் ஆண்டில் மதச்சார்பற்ற குடியரசாக நிறுவப்பட்ட துருக்கி எர்டோகனின் தலைமையின் கீழ் பிராந்திய பொருளாதார சக்தியாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், அரசியலில் இஸ்லாமிய பின்னணியையும், எதிர்ப்புக்களைத் தாங்க இயலாத மனப்பக்குவத்தையும் கொண்ட எர்டோகனின் தேர்வு நேட்டோ உறுப்பினரும், ஐரோப்பிய ஒன்றிய வேட்பாளருமான துருக்கியை ஆட்டாடுர்க்கின் மதச் சார்பற்ற நிலையிலிருந்து மாற்றக்கூடும் என்று அரசியல் விமர்சகர்கள் குறிப்பிடுகின்றனர்.

Post a Comment