Header Ads



''பொதுபல சேனாக்கு எதிரான அமைச்சர்கள், மஹிந்தவை ஆட்சியிலிருந்து வீழ்த்த செயற்படுகின்றனர்''

(TL)

பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக அணிதிரண்டுள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் இலங்கையின் பௌத்த மதத் தலைவரான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியிலிருந்து வீழ்த்துவதை நோக்காகக் கொண்டு செயற்படுகின்றனர். பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக அணிதிரண்டுள்ள அமைச்சர் கூட்டணியை கண்டு நாம் பயப்படப் போவதில்லை; ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே இவ்வணியை கண்டு பயப்பட வேண்டுமென பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகே தெரிவித்தார். 

பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக அமைச்சரவையில் உள்ள சிரேஷ்ட அமைச்சர்கள் சிலர் அணிதிரண்டுள்ளதாக வெளிவந்துள்ள தகவல்கள் குறித்து பொதுபலசேனா அமைப்பின் இணைப்பாளர் டிலந்த விதானகேவிடம் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; 

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் உள்ள சிலர் பொதுபலசேனா அமைப்புக்கு எதிராக அணிதிரளவில்லை. பௌத்தர்களுக்கு எதிராக அணிதிரண்டுள்ளனர். இந்த அமைச்சரவை கூட்டணியில் உள்ளவர்கள் எவருமே 2005 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சிக்கு கொண்டுவர ஆதரவு வழங்கவில்லை. மாறாக அவரை ஜனாதிபதி பதவியில் அமரவிடாமல் தடுத்தனர். 

பௌத்த மக்கள் ஆதரவில் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையில் இன்று அங்கத்துவம் வகிக்கும் சிலர் பௌத்த மக்களுக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான உறவினைச் சிதைக்க முயற்சிக்கின்றனர். இக்கூட்டணியில் உள்ளவர்கள் சர்வதேச தொடர்புகளுடன் இச்சதித்திட்டத்தினை முன்னெடுக்கின்றனர். இவர்களைக் கண்டு பொதுபலசேனா அஞ்ச வேண்டிய அவசியமில்லை. இவர்களைக் கண்டு அஞ்ச வேண்டியது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே. இக்கூட்டணியில் எமக்கேதும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கான விளைவுகளை அக்கூட்டணி அனுபவிக்க வேண்டியிருக்கும் என்றார். - 

No comments

Powered by Blogger.