Header Ads



தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை இன்று - 3 இலட்சத்து 35 ஆயிரத்து 585 மாணவர்கள் தோற்றவுள்ளனர்

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-

பாடசாலைகளுக்கு மாணவர்களைத் தெரிவு செய்வதற்கும் மாணவர்களுக்கு உதவிப்பணம் வழங்குவதற்குமாக நடாத்தப்படும் தரம் 05 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை இன்று ஞாயிற்றுக்கிழமை (17) நாடுபூராகவும் அமைக்கப்பட்டுள்ள 2820 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே. புஷ்பகுமார அறிவித்துள்ளார்.

இப் பரீட்சைக்கு நாடளாவிய ரீதியில் 03 இலட்சத்து 35 ஆயிரத்து 585 மாணவர்கள் தோற்றவுள்ளதாகவும் இப் பரீட்சை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் பொருட்டு 497 மத்திய நிலையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலையில் முன்மொழியப்பட்ட பரீட்சை நிலையத்துக்கு பரீட்சார்த்திகளை அழைத்தச் செல்வதற்கான சகல பொறுப்புக்களும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படடுள்ளது.

ஆகவே, பெற்றோர்கள் ஒத்துழைப்பு வழங்குவதோடு எக் காரணத்தைக் கொண்டும் பரீட்சை நிலையம் அமைந்துள்ள பாடசாலை வளாகத்தினுள் அனுமதியின்றி பெற்றோர்கள் நுளையமுடியாது என்றும் பரீட்சை ஆணையாளர் நாயகம் பெற்றோரைக் கேட்டுள்ளார்.

அதேவேளை, பரீட்சார்த்திகளுக்குத் தேவையான பேனா, பென்சில்கள் என்பனவற்றை விட மேலதிக கோவை, காகிதாதிகள் என்பவற்றை பரீட்சை நிலையத்துக்குள் எடுத்துச் செல்ல முடியாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

முதலாம் வினாப்பத்திரத்துக்;கும், இரண்டாம் வினாப்பத்திரத்துக்கும் இடையிலுள்ள குறுகிய கால இடைவேளையில் பெற்றோர்கள் பாடசாலை வளாகத்துக்குள் நுளைய இடமளிக்கப்படமாட்டாது.

எனவே, பிள்ளைகளுக்குத் தேவையான தண்ணீர்ப் போத்தல் மற்றும் சிற்றுண்டிகளை பரீட்சை நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாகவே பிள்ளைகளிடம் கொடுத்து விடப்படவேண்டும் என்றும் பரீட்சை ஆணையாளர் அறிவுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.