இலங்கையின் முதலாவது செய்மதி தொலைக்காட்சி ஆரம்பம் - 116 நாடுகளில் பார்க்கலாம்
இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் செய்மதி மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பும் முதலாவது செய்மதி தொலைக்காட்சி சேவை 18-07-2014 ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கிருலப்பனையில் அமைந்துள்ள தினெத்த (மூன்றாவது கண்) என்ற தொலைக்காட்சி சேவையை அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று ஆரம்பித்து வைத்தார்.
இந்த தொலைக்காட்சி சேவை ஆசியா ஐரோப்பிய, மத்தியகிழக்கு, அவுஸ்திரேலியா ஆகிய 116 நாடுகளிலும் பார்க்கக்கூடியதாக இருக்கும் என தொலைகாட்சி நிறுவனத்தின் தலைவர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்தார்.
ஆசியாவின் ஆச்சரியமிக்க நாடாக இலங்கையை மாற்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கனவுகளை நனவாக்கும் நோக்கில் இந்த தொலைக்காட்சி சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டங்கள் மாத்திரம் இந்த தொலைக்காட்சி சேவையில் ஒளிபரப்பப்படவுள்ளது.
புதிய தொலைக்காட்சியின் சேவை பற்றி அதன் நிறைவேற்று தலைவர் ரொஹான் வெலிவிட்ட கருத்து வெளியிடுகையில்,
எமது நாடு அபிவிருத்தியை நோக்கி முன்னேறிச் செல்லும் வேளையில், உலகத்தவருக்கு எமது நாட்டை பிழையாக நிரூபித்துக் காட்ட சில ஊடகங்கள் முயல்கின்றன. சமூக இணையத்தளங்கள் கூட தமது தனிப்பட்ட கருத்துக்களை வெளிப்படுத்தவே இயங்குகின்றன.
ஆனால் எமது தொலைக்காட்சி முற்றிலும் மாறுபட்ட விதத்திலேயே இயங்கவுள்ளது. இதன் வளர்ச்சிக்கு பொருளாதார அபிவிருத்தி அமைச்சினதும் ஏனையோரினதும் ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும் தொலைகாட்சி நிறுவனத்தின் தலைவர் தெரிவித்தார்.
Post a Comment