400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிருடன் மீட்பு
இந்தியா - நெல்லை மாவட்டம் அருகே 400 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 3 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். மதுரையில் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ரோபோ என்ற கருவி மூலம் காப்பாற்றப்பட்ட முதல் சிறுவன் ஆவான். இவன் காப்பாற்றப்பட்டதை அடுத்து அப்பகுதியினர் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.
சங்கரன்கோவிலை அடுத்த குத்தாலப்பேரி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன் ஹர்ஷன் (3) . விவசாயி ஒருவர் தனது தோட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைத்து, அதை மூடாமல் வைத்திருந்தார். அங்கு விளையாடிக் கொண்டிருந்த ஹர்ஷன் அதில் தவறி விழுந்தான்.
இவனை மீட்க மாவட்ட கலெக்டர் கருணாகரன் உத்தரவின்பேரில் மதுரையில் இருந்து 4 பேர் கொண்ட தனியார் குழுவினர் வரவழைக்கப்பட்டனர் . இதனையடுத்து ரோபோ என்ற கருவி மூலம் தீ அணைப்பு பிரிவினர், போலீசார் முயற்சியில் குழந்தை மீட்கப்பட்டது.
காலை 10. 15 மணிக்கு குழிக்குள் விழுந்த இவன், 20 அடி ஆழத்திற்குள் இருந்ததால் விரைவில் காப்பாற்ற முடிந்தது. மதியம் 4 மணியளவில் மீட்கப்பட்டு சங்கரன் கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டான். சிறுவன் உடல் நிலை சீராக உள்ளது.
ரோபோ கண்டுபிடித்த மணிகண்டன், ராஜ்குமார்( மதுரை ஆண்டாள் புரம் ) ஆகியோர் கூறியதாவது; எனது (மணிகண்டன்) குழந்தை போர்வெல்லில் விழுந்தது. அவனை மீட்டேன். இதனையடுத்து 2004 முதல் எனக்கு இந்த கனவு இருந்தது. இதில் பல முன்னேற்றம் தற்போது ஏற்பட்டுள்ளது. என்றார். போர்வெல் பைப் போடப்பட்டதால் அதிக ஆழம் குழந்தை போகாது. விரைவில் தகவல் தெரிவித்தால் நாம் குழந்தையை காப்பாற்றி விடலாம். என்றனர்.

Post a Comment