ஹக்கீம் அரசாங்கத்தை விட்டு விலகமாட்டார், விலகிச் சென்றாலும் பிரச்சினை இல்லை - அமைச்சர் டலஸ் அழகப்பெரும
தற்போதைய நிலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்லமாட்டார் என்று நம்புகின்றோம். ஆனால் அவ்வாறு விலகிச் சென்றாலும் எங்களுக்குப் பிரச்சினை இல்லை. இவ்வாறு இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவதும் இணையாமல் இருப்பதும் அவர்களின் விருப்பம். அவ்வாறு இணைந்தாலும் அது அரசாங்கத்திற்கு ஆபத்தானதோ அல்லது அபாய சமிக்ஞையோ அல்லவெனவும் அவர் தெரிவித்தார்.
கொழும்பில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு , ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இணைவது தொடர்பில் எவ்வாறான தீர்மானம் எடுத்துள்ளது. அல்லது முஸ்லிம் காங்கிரஸிற்குள் இது தொடர்பில் ஆராயப்பட்டு முடிவெடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து எமக்கு எதுவும் தெரியாது.
எவ்வாறெனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைவதும் இணையாமல் இருப்பதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸை பொறுத்த விடயமாகும். அது அவர்களது விருப்பமுமாகும்.
தற்போதைய நிலைமையில் அமைச்சர் ரவூப் ஹக்கீம் அரசாங்கத்தை விட்டு விலகிச் செல்லமாட்டார் என்று நம்புகின்றோம். ஆனால் அவ்வாறு விலகிச் சென்றாலும் எங்களுக்குப் பிரச்சினை இல்லை.
முஸ்லிம் காங்கிரஸ் கூட்டமைப்புடன் இணைவது அரசாங்கத்துக்கு ஆபத்தான விடயமல்ல என்பதனை அரசாங்கத்தின் சார்பில் தெளிவான முறையில் கூறுகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment