விதவையை திருமணம் செய்தால் தேனிலவு பயண செலவு இலவசம்
இந்தியா - சத்தீஸ்கரில் உள்ள ஒரு அமைப்பு, விதவை திருமணத்தை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின், வெளிநாட்டு தேனிலவு பயண ஏற்பாடுகளை, இலவசமாக செய்வதாக அறிவித்துள்ளது.
அந்த மாநிலத்தில், 'நேச்சர் கேர்' என்ற, சமூக அமைப்பு செயல்படுகிறது. இந்த அமைப்பு, கணவனை இழந்த, விதவைப் பெண்களின், மறுமணத்தை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. இதன்படி, விதவை பெண்களை திருமணம் செய்ய முன் வரும் ஆண்களுக்கு, அவர்களின் வெளிநாட்டு தேனிலவு பயணத்துக்கான செலவு முழுவதையும், ஏற்பதாக அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ், புதுமணத் தம்பதியர், ஐந்து நாட்கள், ஆசிய நாடுகளில், ஏதாவது ஒரு நாட்டிற்கு, தேனிலவு பயணம் மேற்கொள்ளலாம். அதற்கான, விமான டிக்கெட், தங்குமிட வசதி உள்ளிட்ட அனைத்து செலவுகளையும், அந்த அமைப்பே ஏற்கும்.
இந்த அமைப்பின், இயக்குனர், வினிதா பாண்டே கூறியதாவது: எங்களால் முடிந்த அளவு, இந்த சமூகத்துக்காக, இது போன்ற, சில நற்பணிகளை செய்து வருகிறோம். இத்துடன், விதவை மறுமணத்தை ஊக்குவிக்கும் விதமாக, அந்த ஜோடிகளுக்கு, வேலைவாய்ப்பு, வீடு உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்தி தரும்படி, மாநில அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளோம். இவ்வாறு, அவர் கூறினார். சத்தீஸ்கரில், பா.ஜ.,வைச் சேர்ந்த, முதல்வர், ரமண் சிங் முதல்வராக உள்ளார். நம், இந்திய நாடும், ஆசியா கண்டத்தில் தான் உள்ளது. இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என, 50க்கும் மேற்பட்ட நாடுகள், ஆசிய நாடுகளாக உள்ளன.

Post a Comment