'தமிழரின் அழைப்பை செவிசாய்க்காது, முஸ்லிம் காங்கிரஸ் சந்தர்ப்பவாத அரசியல் செய்தது' வட மாகாண சபை உறுப்பினர் அ.அஸ்மின்
(பழுலுல்லாஹ் பர்ஹான்)
வடக்கும் கிழக்கும் தமிழ் பேசுகின்ற தமிழ் முஸ்லிம் மக்களின் தாயகப் பிரதேசம் என்பது காலத்தால் எப்போதோ நிர்ணயிக்கப்பட்ட ஒருவிடயம். வரலாற்றில் பின்னோக்கி சென்று பார்க்கின்றபோது இந்த உண்மையினை எம்மால் கண்டுகொள்ள முடியும். 2012ம் ஆண்டு கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் நடைபெற்றபோது கிழக்கில் இருந்த முஸ்லிம்கள் இந்த நாட்டின் ஆளும் தரப்பிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களுக்கு மதிப்பளித்து, தமிழ் முஸ்லிம் உறவினை வலுப்படுத்தும் ஒரு ஆட்சியமைவை எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் துரதிர்ஷ்டவசமாக அங்கே முஸ்லிம் காங்கிரஸ் மக்களின் அடிப்படை உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது, தமிழ் சமூகத்தின் அழைப்பையும் செவிசாய்க்காமல் சந்தர்ப்பவாத அரசியல் செய்தார்கள். இதன் மூலம் கிழக்கின் ஒரு முக்கிய பூர்வீக இனத்துவமாகிய தமிழ் மக்களின் பிரதிநிதியான தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிர்க்கட்சி வரிசையில் அமரவேண்டியதாயிற்று. இதன் மூலம் தமிழ் மக்களின் நலன்கள் மாத்திரமல்ல முஸ்லிம் மக்களின் நலன்களும் பாதிக்கப்பட்டிருக்கின்றன. வடக்கிற்கும் கிழக்கிற்கும் இருக்கின்ற வரலாற்று உறவினை அடையாளம் செய்வதாக எனது இந்தப் பிரேரணை அமைந்திருக்கின்றது.
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக புல்மோட்டை அண்டிய கொக்கிளாய்க் கடல்நீரேரியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்த புல்மோட்டை மீனவர்கள் மீதான மத்திய அரசாங்கத்தின் தடை 04 மாதங்களாக கடுமையாக அமுலில் இருக்கிறது. முக்கியமாக இயந்திர படகுகள் பாவிக்க கூடாது என்றும் சிறிய வலைகள் பாவிக்கக் கூடாது என்றும் அத்தடைகள் விதிக்கப்பட்டிருக்கின்றது.
இத்தொழிலில் இப்பிரதேசத்தை சேர்ந்த 2200ற்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர். இத்தொழிலே மிகப் பிரதான வாழ்வாதாரமாகும். வேறு தொழில்களுக்கு பழக்கப்படாதவர்கள். திடீரென அமுலுக்கு வந்த தடையினால் மக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.
குறிப்பாக அன்றாட உணவுத் தேவைகளைக் கூட நிவர்த்தி செய்து கொள்ள முடியாத நிலையே காணப்படுகின்றது. 2013-14 காலப்பகுதியில் பாவிக்கப்பட்ட 14க்கும் அதிகமான இயந்திர படகுகள் முல்லைத்தீவு மீன்பிடி திணைக்களத்தின் பணிப்புரையின் பேரில் பொலிசாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படும் உள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டாலும் இன்னும் எந்தவொரு படகும் விடுவிக்கப்படவில்லை. இதனால் படகுகள் அதிக சேதத்துக்குள்ளாகியுள்ளன. இதேபோன்று தீருகோணமலை மீன்பிடி திணைக்களத்தின் பணிப்பின் பேரில் கைது செய்யப்பட்ட கொக்கிளாய் பிரதேச சிங்கள மீனவர்கள் உடபட 06 இயந்திர படகுகள் நிதிமன்ற விசாரணைகளின் பின் விடுவிக்கப்பட்டுள்ளன. (2014-02-21) அத்தோடு சிங்கள் மீனவர்கள் எவ்வித தடைகளுமின்றி இத்தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் சட்டவிரோதமான முறையில் நீர்கொழும்பு பிரதேசத்திலிருந்த வந்திருக்கும் மீனவர்களும் அடங்குவர். கொக்கிளாய் பிரதேசத்தில் ஏறத்தாள 160 குடும்பங்களே வசிக்கின்றனர். ஆனால் 300க்கும் அதிகமான படகுகளை அவர்கள் உபயோகிக்கின்றார்கள்.
மக்களின் எதிர்பார்பப்பு
• தடையுத்தரவானது அனைவருக்கும் பொதுவான முறையில் முழுமையாக அமுல்படுத்துவதை விரும்புகின்றனர்.
• இதனால் உடனடியாக பாதிக்கப்படுகின்றவர்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்கு நிவாரணம் ஒன்று பெற்றுத்தரப்பட வேண்டும்.
• வடக்கு கிழக்கு என்று நோக்காது மக்களின் பொதுப் பிரச்சினையாக கருத்திலெடுத்து நிரந்தர தீர்வொன்று பெற்றுத் தரப்பட வேண்டும்.
• குறிப்பான இயந்திர படகுகள் பாவிக்க முடியாது என்பதால் பதிவு செய்யப்பட்ட அனைவருக்கும் வல்லங்களும் வலைகளும் பெற்றுத் தரப்பட வேண்டும்.
• புதிதாக கிராமங்கள் உள்வாங்க்ப்படுவது தவிர்க்கப்பட வேண்டும். குறிப்பாக சிங்கபுர கிராமம் புதிதாக இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றது.
வடக்கு மாகாண நிர்வாக எல்லைப் பிரதேசத்தில் அமைந்திருக்கின்ற கொக்கிளாய் கடல்நீர் ஏறியில் வாழ்வாதாரத்தை முன்னெடுக்கின்ற புல்மோட்டை மீனவர்கள், மற்றும் கொக்கொளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி, தென்னைமரவாடி மீனவர்கள் விடயத்தில் அமுலுக்கு வந்திருக்கின்ற கடல் வளத்தைப் பாதிக்கும் மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்துவதன் மீதான தடை குறித்த வலயத்தின் எல்லா மீன்பிடி நிலைகளிலும் அமுலாக்கப்படுவதை உறுதிசெய்யவும்.
குறித்த பிரதேசத்தில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காக திட்டமிட்ட அடிப்படையில் குடியேற்றங்களையும், அத்துமீறல்களை மேற்கொள்வதை தடைசெய்யவும், தடைச்சட்ட அமுலாக்கத்தினால் பாதிக்கப்படுகின்ற மீனவர்களுக்கான மாற்று ஏற்பாடுகளுக்கு வழிவகை செய்தல் அவசியம் எனவும் மத்திய அரசாங்கத்தின் கடற்றொழில் நீரியல்வள அமைச்சுக்கு வடக்கு மாகாணசபையினூடாக கோரிக்கை ஒன்றினை முன்வைக்கின்றேன்.
என பிரேரணையினை முன்வைத்தார் வடக்கு மாகாண சபை உறுப்பினர்.
இதற்கு பதிலழித்துப் பேசிய வடக்கு மாகாண சபையின் உதவித் தவிசாளர் அன்டனி ஜெகநாதன் அவர்கள் மேற்படி தீர்மானம் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த விடயமாகும், தமிழ் மக்களுக்கும் இஸ்லாமிய மக்களுக்கும் இடையிலான உறவினை நாம் பலமடையச் செய்யவேண்டும்.
அத்துமீறிக் குடியேறும் மீனவர்கள் விடயத்திலும் நாம் தீர்மானம் ஒன்றினை மேற்கொள்தல் அவசியமாகின்றது. எனவே கௌரவ உறுப்பினர் அஸ்மின் அவர்களால் முன்வைக்கப்பட்ட இப்பிரேரணையினை நான் வழிமொழிகின்றேன் எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபையில் மேற்படித் தீர்மானம் ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்டது.

நீங்கள் குறிப்பிட்டுள்ள விடயங்களுக்கு மேலாக,
ReplyDeleteஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு மாகாண சபையில் தமிழர் தரப்பு அழைப்பைப் புறக்கணித்து விட்டு அரசுக்குச் சோரம்போய் ஆட்சியமைத்து மேற்கொண்ட முதலாவது துரோகத்தனம், 'திவிநெகும' சட்டமூலத்திற்கு ஆதரவளித்ததாகும் என்பதுவே அவர்களின் கிழக்கு மாகாண சந்தர்ப்பவாத அரசியலின் முதலாவது வரலாற்று அத்தியாயமாகும்.
-புவி. எம்.ஐ. றஹ்மதுழ்ழாஹ், காத்தான்குடி-