Header Ads



தலிபான்களுடன் பேச்சுவார்த்தையை நிறுத்தினால் ராணுவ நடவடிக்கைக்கு வழிவகுக்கும் - இம்ரான்கான் எச்சரிக்கை


தலிபான் இயக்கத்தின் பிரதிநிதிகளுடன் பாகிஸ்தான் அரசு தற்போது பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. ஆயிரக்கணக்கானோரைப் பலிவாங்கிய கிளர்ச்சிகளை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் இருதரப்பினரும் பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தலிபான் இயக்கத்துடனான அரசு பேச்சுவார்த்தையை நிறுத்தக்கூடாது என்றும், பேச்சுவார்த்தை தோல்வியடைவது என்பது ராணுவ நடவடிக்கைகளுக்கே வழி வகுக்கும் என்றும் முன்னாள் கிரிக்கெட் வீரரும், இந்நாள் டெஹ்ரிக்-இ-இன்சாப் கட்சித் தலைவருமான இம்ரான்கான் இன்று தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முதலில் அமைதிக்கு ஒரு வாய்ப்பளிக்கவேண்டும். அதன்பின்னரே ராணுவ நடவடிக்கை இறுதியாகத் தேர்வு செய்யப்படவேண்டும் என்று அவர் கூறியுள்ளார். வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் ராணுவத் தாக்குதலை மேற்கொண்டால் 40 சதவிகிதமே வெற்றிவாய்ப்பு கிட்டும் என்று பிரதமர் நவாஸ் ஷெரிப் குறிப்பிட்டதாகவும் இம்ரான்கான் தெரிவித்தார்.

பெரும்பான்மையான பாகிஸ்தானிய மக்கள் அமைதிப் பேச்சுவார்த்தையையே விரும்புகின்றனர். மேலும் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதிகளில் அவர்களின் மேம்பாட்டிற்காக அரசு பணம் செலவிடவேண்டும். ராணுவ நடவடிக்கை முடிவுக்குக் கொண்டு வராது. வன்முறையில் இறப்பவர்களின் பிள்ளைகள் நாளை கத்தியைக் கையில் எடுப்பார்கள். இதனால் தீவிரவாதமே அதிகரித்து பின்னர் அமைதிப் பேச்சிற்கு வழிவகுக்கும் என்று இம்ரான் தெரிவித்துள்ளார்.

இதுமட்டுமின்றி பாகிஸ்தானின் எந்தப் பகுதியிலும் இதற்கு முன்னர் நடைபெற்ற ராணுவ நடவடிக்கைகள் வெற்றி பெற்றதில்லை என்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.

எனினும், இம்ரான்கான் முன்னிலையில், பிரதமர் ராணுவ நடவடிக்கையின் வெற்றி வாய்ப்பு குறித்து இராணுவப்படைத் தளபதியிடம் குறிப்பிட்டதாகக் கூறப்படுவதை அரசு அதிகாரிகள் மறுத்துள்ளனர்.

No comments

Powered by Blogger.